பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வீட்டிற்கோர் புத்தகசாலை


உலகிலே எங்கேனும் ஓரிடத்தில் ஏதோ ஓர் காரணத்தால் நேரிடும் ஏதோ ஓர் சம்பவம், உலகின் மற்றப் பாகங்களைப் பாதிக்கும் நாட்களில் நாம் வாழ்கிறோம். பாஸ்தீனத்தில் போர்; அதுபற்றிய வாதப் பிரதிவாதம், பாளையங்கோட்டையில். இத்தாலியில்; எலக்ஷன் என்றால், இங்கு எந்தக் கட்சி அங்கு வெற்றி பெறவேண்டும் என்பது பற்றி விவாதம். உலகத் தொடர்பு அதிகரித்துவிட்ட வளர்ந்துகொண்டே போகும் நாட்களிலே நாம் வாழ்கிறோம். வாழ்கிறோம் என்றால் நமது வாழ்வையும் நாட்டின் வாழ்வையும் வளமாக்கும் பெரும் பொறுப்பை ஆயிரம் மைலுக்கப்பாலிருந்து வந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டல்ல, யார் சிரத்திலே மணிமுடி ஜொலிக்கிறது, எவர் கரத்திலே உடைவாள் மின்னுகிறது என்று பார்த்து ஆட்சி பொறுப்பை அப்படிப்பட்டவர்களிடம் ஒப்படைத்து விட்டுமல்ல, ஆட்சிப் பொறுப்பை மக்கள் ஏற்றுக்கொண்டு நாட்டில் நாயகர் நாங்கள் என்று மார்தட்டிக் கூறிக் கொண்டுள்ள நிலை இருக்கிறது. உலகுக்கு இது நன்கு தெரியும் உலகின் கவனம் நமது நாட்டின் பக்கம் நன்றாகத் திரும்பும்படியான முறையிலும், அளவிலும் நாம் நமது நாட்டின் சிறப்புப் பற்றியும், நமது ஆற்றலைப்பற்றியும் பாட்டு மொழியிலே பேசிவிட்டோம் சற்று அதிகமாகவே கூட, "என் நாடு பொன்னாடு, ஏது இதற்கோர் ஈடு" என்று திருப்புகழ் பாடினோம். இங்கு வானைமுட்டும் மலைகள். வற்றாத ஆறுகள் வளமான வயல்கள், கனி குலுங்கும் சோலைகள் ஏராளம்; முத்து உண்டு எமது கடலில்;