79
இவை எல்லாம் அறிந்து, "மற்றினிச் சமண் செய்யும் வஞ்சனை அறியேம்!" என உள்ளம் உடைந்தார். மங்கையர்க்கரசியாரும் ஞானசம்பந்தர் தம்பால் நன்மையல்லாத செய்யும் “ஊனம் வந்தடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது!" என்று உறுதி கூறினர்.
சென்ற சமணர்கள், தமது மந்திரத்தால் தீக்கொளுவ மாட்டாதவராய் வருந்தினர். "நீண் முடி வேந்தன் ஈதன்றி நம் மேன்மை கொளான்; நம் பிழைப்பும் ஒழியும் !" என்று உணர்ந்து, பொதி தழல்கொடு புக்கு அந்தண் திருமடத்துப் புறத்து அயல் இருள்போல் வந்து தம்தொழில் புரிந்தனர். வஞ்சனை மனத்தார் அத்தொழில் வெளிப்படுத்தும் அடியார், மனம் கலங்கிப் பிள்ளையாருக்கு அத்தீங்கினைச் சொன்ன பொழுது, அவர் பரிந்தருளி "இது கோல் வழு" எனக் கண்டு, அத்தீ அரசனை அடையுமாறு "பையவே சென்று பாண்டியற்காகவே" என்று பாடி வேண்டினார்.
பாண்டிமா தேவியார் தமது பொற்பிற் பயிலுநெடு
மங்கலநாண் பாது காத்தும்
ஆண்டகையார் குலச்சிறையார் அன்பி னாலும் அரசன்பால்
அபராதம் முறுத லாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும்
வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடையன் ஆத லாலும்
தீப்பிணியைப் பையவே செல்க என்றார்.
அத்தீயும் தென்னனை 'மேவிப் பெருந் தழற்பொதி வெதுப்பு' எனப் பெயர் பெற்றது.