பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

சாயங்கால மேகங்கள்

போலீஸ் என்று அடையாளம் தெரியாத ஒரு லாரியில் அவர்கள் தீவுக் கிராமத்துக்குப் புறப்பட்டனர். எண்ணூரிலிருந்து தீவுக்குப் போவதற்கு வசதிகள் நிறைந்த சுங்க இலாகாவின் விசைப்படகு ஒன்றைப் போலீஸ்காரர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். போலீஸ் உயர்தர அதிகாரிகள் இந்தக் கேஸில் உண்மையாகவே ஆர்வம் காட்டியதாகத் தோன்றியது. போகும் போது அவர்களிடம் பேசிப் பார்த்ததிலிருந்து இதில் வெற்றியடைவதன் மூலம் சிலர் தங்களுக்குப் பிரமோஷனைக் கூட எதிர்பார்ப்பதாகத் தெரிய வந்தது.

முதலில் கிராமத்துப் பெரியவர் காளத்திநாதனைப் பார்த்து அவரை வழிகாட்டச் சொல்லி அழைத்துச் சென்று மயானத்தில் அந்தப் பையனின் பிணத்தைத் தோண்டி எடுத்துப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட வேண்டுமென்ற முடிவுடன் தீவில் போய் இறங்கினார்கள் அவர்கள். ஆனால் தீவு வெறிச்சோடிக் கிடந்தது.

முகப்புக் குடிசை அருகே ஆட்களைப் பார்த்ததும் “மீன் வாங்க வந்தீங்களா?” என்று தெலுங்கில் கேட்டுக் கொண்டு, எதிர்ப்படும் வழக்கமான மீனவப் பெண்ணைக் கூட. அன்று அங்கே காணவில்லை. குடிசையில் எட்டிப் பார்த்தால் அதுவும் காலி செய்யப்பட்டு மணல் தரை சுத்தமாகத் தெரிந்தது.

அதைக் கண்டு பூமிக்கு ஆச்சரியமாயிருந்தது. இரவு 2 மணிக்குப் பின் காலை ஏழரை மணிக்குள் அவசர அவசரமாக உஷாராகி அவர்கள் தப்பியிருக்க வேண்டும் என்று தோன்றியது. காளத்திநாதனுடைய ஓட்டடுக்கு வீடும் பூட்டியிருந்தது. அவர் எங்கே போயிருப்பார் என்பது தான் பூமிக்குப் புரியாத புதிராயிருந்தது.

“என்ன மிஸ்டர் பூமிநாதன்! ராத்திரி ஏதாவது கனவு கினவு கண்டீர்களா? அல்லது இதெல்லாம் நிஜமாக நடந்ததா? நீங்கள் சொன்னபடி எதுவுமே இங்கே இல்லியே?!” என்று மப்டியிலிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும்’ கிரைம் பிரிவு அதிகாரியும் பூமியைக் குத்தலாக வினவினார்கள்.