நாமகள் இலம்பகம்◊11
மாலைப்பொழுது ஆடவேண்டிய விளையாட்டை இடைவேளையிலும் தொடர்ந்தனர். கவலை என்பது என்ன என்று தெரியாமல் அவளை அவன் இன்புஊட்டி வந்தான்; அவளும் அவன் மீட்டும் கீதத்துக்கு யாழின் நரம்புகளாகச் செயல்பட்டாள்; நாதம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இடையில் நரம்பு அறுந்து விட்டது போன்ற கீறல் உண்டாகியது.
“என்ன ஏதோ மாதிரியாக இருக்கிறாயே ?” என்றான்.
“எனக்கு ஏதோ புதிய அச்சம் தோன்றுகிறது; ஏன்? எதற்கு? என்று தெரியவில்லை.”
“காரணம் ?”
“நீங்கள் கவலை இல்லாமல் வெய்யில் படாமல் குளிரில் உறைந்து கிடைக்கின்றீர். எந்தக் கடமையிலும் நாட்டம் இல்லாமல் இங்கு வாட்டமின்றி இருக்கின்றீர்; ஏதோ எங்கோ ஒட்டை விழுந்துவிட்டது போல் தோன்றுகிறது.”
“கோட்டை விடுவேன் என்று நினைக்கிறாயா”
“செல்லும் கோடு நேர்க்கோடாக இருப்பது போல் தெரியவில்லை.”
“கலைகள் அறிந்த உனக்குக் கணக்குக் கூடத் தெரியுமா?”
“கனவு சாத்திரம் கற்றிருக்கிறீர்களா?” என்றாள்.
“ஒய்வாக இருக்கும்போது அதையும் கற்றிருக்கிறேன்.”
“யான் கண்ட கனவு; அதன் பலன் கூற முடியுமா?”
“விடுகதை விடுத்த எனக்கு இந்த இடுகதை விடுவிக்க இயலும்” என்றான்.
“அசோகமரம் ஒன்று நன்கு செழித்து வளர்ந்தது; திடீர் என்று அது பட்டுப்போகிறது; அடிமரம் காய்ந்து