பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சொன்னால் நம்பமாட்டீர்கள்



பிறகு இரண்டு மாத காலம், மாணவர்கள் தொடர்ந்து ஹர்த்தால் செய்ததால் நிர்வாகம் ஸ்தம்பித்தது.

தலைமை ஆசிரியர் ராஜினாமா செய்துவிட்டு பள்ளியை விட்டு வெளியே போய்விட்டார். எனது பள்ளிப் படிப்பும் அத்துடன் முடிந்தது. பின்னர் ஒரு சமயம் ஒரு மாநாடு சம்பந்தமாக நான் திருச்சிக்குப் போயிருந்தபோது மேற்படி தலைமை ஆசிரியரைச் சந்திக்க நேர்ந்தது.

“என்ன படிக்கிறாய்?” என்று கேட்டார். “தங்கள் புண்ணியத்தினால் என் பள்ளிப் படிப்புத்தான் முடிந்து விட்டதே?” என்றேன்.

“உன் புண்ணியத்தினால் என் வேலையும் போய் விட்டதல்லவா?” என்றார். இருவரும் வாய்விட்டுச் சிரித்தோம்.

“என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும். நாம் இருவரும் இனி நண்பர்களாக இருப்போம்” என்றார்.

சரி என்று அவர் வீட்டுக்குச் சென்றேன். அன்பாக உபசாரம் செய்து விருந்தளித்தார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு சிறு பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தார்.

“இது யார் சார்?” என்றேன். “என் பேத்தி” என்று சொல்லிவிட்டு “இவள் பெயர் என்ன தெரியுமா? கமலா” என்றார். நான் வியப்பால் அவரையே நோக்கினேன். அவர் சொன்னார், கமலாநேரு இறந்த அன்று இவள் பிறந்தாள். அதனால் இவளுக்குப் பேர் கமலா என்று வைத்தேன். தேச பக்தி என்பது உனக்கு மட்டும்தான் சொந்தமா?” என்று கேட்டார்.

‘உங்கள் தேச பக்திக்கு தலை வணங்குகிறேன்,’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன்.