74
ஞாயிறும் திங்களும்
தமிழ்வானில் வட்டமிட்டுச் சுற்றிச் சுற்றித்
தனக்குநிகர் இல்லை.எனப் பாடிப் பாடி அமிழ்தனைய இசைபரப்பி நம்மை எல்லாம்
அகமகிழச் செய்ததொரு வானம்பாடி இமிழ்கடலுக் கப்பாலும் பறந்து சென்றே
இனியதமிழ் பாடிவரக் கண்டு வந்தோம் உமிழ்சினத்துக் காலனெனும் வேடன் கண்டான்
ஒருசிறிதும் இரக்கமிலான் வீழ்த்தி விட்டான்.
வித்தாகி முளையாகிக் கழனி யெங்கும்
விளைகின்ற பயிராகிச் செழித்து நல்ல கொத்தாகிப் பயனாகிக் கூடுங் காலை
கொள்பயனைச் சிதைத்தானோர் கொடிய பாவி பித்தாகித் திரிகின்றோம் துன்ப மென்னும்
பேராழி மூழ்குகின்றோம் தமிழர் வாழ்வின் சொத்தாகி வந்தானை அண்ணா என்னும்
சொல்லுக்கே உரியானைப் பறித்தான் அம்மா
அறப்போர்கள் பலமுடித்தான் ஆட்சி பெற்றான்
அன்பொன்றே மனத்தமைத்தான் அந்த ஆட்சிச் சிறப்பாலே முதலமைச்சன் ஆனான் அண்ணன்
செந்தமிழர் நற்றவமென் றிருந்தோம், ஆனால் இறப்பாலும் முதலமைச்சன் ஆனான் அம்மா!
இத்துயரை எவரிடம்சென் றாற்றிக் கொள்வோம்? மறப்பென்னும் மருந்தாலும் மாறா தந்தோ!
மனமென்னும் ஒன்றனைநாம் பெற்ற தாலே.
செந்தமிழ்க்கும் புலவர்க்கும் விடிவு காலம்
சிறந்ததொரு பொற்காலம் மீண்டும் இங்கு வந்திருக்க வழியுண்டென் றெண்ணி எண்ணி
மகிழ்ச்சியெனுங் கடலுக்குள் விரைந்து சென்றோம் உந்திஎழும் கற்பனையாம் படகில் வந்தோம்
ஒளிவிளக்காம் கரைவிளக்கம் அணைந்த தந்தோ நொந்திருக்கும் துயர்க்கடலுள் வீழ்ந்து விட்டோம்
நோவகற்றக் கைகொடுக்க வருவார் யாரோ?