பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

மற்றவர்களிடம் எடுத்துக்கூறி மகிழ்ந்தார். இஃது சிறுவர் ஈசுபு மீது இன்னும் அதிகப் பிரியத்தையும் பாசத்தையும் காட்டி சீராட்டிப் பாராட்டத் தூண்டியது. இதனாலெல்லாம் அளவுக்கதிகமான வெறுப்பும் பொறாமையும் கொண்ட மற்ற சகோதரர்கள், சிறுவர் ஈசுபைத் தீர்த்துக் கட்டிவிட முடிவு செய்து, அதனை நிறைவேற்றுமுகமாக தம் தந்தை யாகூப் நபியவர்களிடம் சென்று, தாங்கள் அனைவரும் ஈசுபை உடன் அழைத்துக் கொண்டு ஆடு மேய்க்கப் போவதாகக் கூறி அனுமதி பெற்று அழைத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியை.

'குளிர்ந்த நிழலுள மரத்தடியில்
கொண்டுபோய் விட்டுநாம் விளையாடுவோம்
தெளிந்த நீருள வருவிகுளந் தேடி
குளிந்தாடு மேய்த்து வாரோம்
குழந்தை யூசுபைக் கூட்டுமென்று
கூறிடப் பிதா மனங்குளிர்ந்து
பொழிந்துபால் தயிரமுது மூட்டி
போற்றி ஈசுபை அனுப்பி வைத்தார்’

எனக் கூறுகிறார் நூலாசிரியர் மதாறுப் புலவர் அவர்கள்.

ஆள் அரவமற்ற கானகப் பகுதியினுள் நீண்ட தூரம் சிறுவர் ஈசுபை அழைத்துச் சென்றனர். செல்லும்போதே சிறுவர் ஈசுமை அடித்தும், உதைத்தும் இம்சித்தனர். இறுதியாகப் பாழடைந்து கிடந்த கிணற்றினுள் தள்ளி விட்டு விட்டு வீடு திரும்பினர். மாபெரும் தவறைச் செய்து விட்டுத் திரும்பும் சகோதரர்களின் மனச்சாட்சி பெரிதும் உறுத்தவே அவர்களை அச்சம் கல்விக் கொண்டது. 'சிறுவர் ஈசுபு எங்கே?' என்று கேட்கும் தந்தையாரிடம் என்ன பதில் கூறித் தப்புவது என்பதை எண்ணித் திகைத்து