78
வல்லிக்கண்ணன்
25வது இதழ் விசேஷத் தயாரிப்பு. அதிகப் பக்கங்கள், கவிதைகள், கதைகள், சித்திரங்கள் மிகுதியாக இடம் பெற்றன.
கசடதபறவின் ஒவ்வொரு இதழிலும் அக்கம் பக்கம் என்ற பகுதி உண்டு. அக்கப்போர், தாக்குதல், தாக்குதலுக்குப் பதில், சூடும் சுவையும் கலந்த அபிப்பிராயங்கள், தகவல்கள், இதில் வெளிவந்து கொண்டிருந்தன.
கசடதபற, 32 இதழ்களுக்குப் பிறகு, 1973 ஜூன்- ஜூலை என்று குறிப்பிட்டு, சிதம்பர கிருஷ்ணன் ஓவியம் ஒரு பக்கமும் ஒரு அறிவிப்பை மறுபக்கமும் அச்சிட்ட ஒரு தாளை அனைவருக்கும் அனுப்பியது. அதில் கண்ட விவரம் இதுதான்-
“மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கசடதபற இந்த அறிவிப்புடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது.
இலக்கியச் சிற்றேடுகளின் புறப்பாடும், நிப்பாடும் ஆன வாழ்க்கை அதை இயக்குபவர்களின் உற்சாகத்தைப் பொறுத்தது என்று இந்தியச் சிற்றேடுகளைப் பற்றிக் கூறப்படுவதுண்டு. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டு வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது கசடதபற.
இலக்கியம் என்பதை ஒரு கலைஞனின் அனுபவத்தைக் கொண்டு பார்த்தால் அதற்குத் தொடர்ச்சிதான் குறிப்பே தவிர, தொலைதல் இல்லை என்பது தெளிவாகிறது. இலக்கிய முயற்சிகளும் அப்படித்தான்.
கசடதபறவின் இதழ்கள் வெளிவந்த சமயத்தில் அதனோடு தொடர்பு கொண்டிருந்த அத்தனை பேர்களுக்கும் கசடதபற நன்றி தெரிவிக்கிறது.”
பொதுவாக, சிறு பத்திரிகைகள் தங்களுடைய கஷ்ட நஷ்டங்கள், பத்திரிகைகள் தயாரிப்பில் எதிர்ப்படும் சிரமங்கள் முதலியவற்றை அடிக்கடி ஒலிபரப்புவதும், சந்தாதார் ஆகும்படி வாசகர்களுக்கு வேண்டு கோள் விடுத்தவாறு இருப்பதும் ஒரு மரபு ஆகவே உள்ளது. ஆனால் கசடதபற தனது மூன்றாண்டு வாழ்வில் ஒரு தடவைகூட இந்த ரீதியில் எதுவும் எழுதியதே இல்லை. இதுவும் அதன் தனிச்சிறப்புகளில் ஒன்று
சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘கசடதபற'வைக் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சின்ன அளவில், குறைந்த பக்கங்களோடு, சில இதழ்கள் வரவும் செய்தன. சீக்கிரமே அம் முயற்சி கைவிடப்பட்டது. ☐☐