தமிழ்த் தாத்தா
39
சென்னைக்குப் போவதை மறுத்தது
ஒருநாள் சேஷாத்திரி ஆச்சார் கும்பகோணத்திற்கு வந்து ஆசிரியப் பெருமானைப் பார்த்தார். “நீங்கள் சென்னைக்கே வந்து விட்டால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
“நான் எப்படி சென்னைக்கு வருவது? இங்கேதானே எனக்கு உத்தியோகம் இருக்கிறது?” என்றார் ஆசிரியர்.
“நீங்கள் சென்னைக்கு வருவதாக இருந்தால் அங்கே உள்ள மாநிலக் கல்லூரிக்கு உங்களை மாற்றும்படி நானே ஏற்பாடு செய்கிறேன். கல்வித்துறையில் எல்லோரையும் எனக்குத் தெரியும். நீங்கள் சென்னை வரச் சம்மதம் கொடுங்கள், போதும்” என்றார் ஆச்சார்.
அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் முதிர்ந்த பிராயமுள்ள ஒருவர் தமிழாசிரியராக இருந்தார். அவருக்குச் சென்னை சொந்த ஊராக இருந்தது. சென்னைக்கு வந்தால் பதிப்பு வேலைகளை எளிதில் கவனித்துக்கொள்ள வசதி ஏற்படும் என்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தாலும், அந்த முதியவருக்கு முதிர்ந்த காலத்தில் இடையூறு ஏற்படுத்துவதை விரும்பவில்லை. எனவே, சென்னைக்கு வர இயலாது என்று தெரிவித்துவிட்டார்.
பாராட்டுத் தாள்
1902-ஆம் ஆண்டு கோடை விடுமுறையின்போது பாரிஸில் இருந்த பேராசிரியர் ஜூலியன் வின்சனின் மாணாக்கர் ஒருவர் சென்னைக்கு வந்தார். ஜூலியன் வின்சனுக்கும் ஆசிரியருக்கும் நெடுநாள் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி ஆசிரியருக்குக் கடிதம் எழுதி வருவார்.
வின்சனின் மாணாக்கர் தமிழகம் வந்தபோது தஞ்சாவூரில் லைனல் பைபர்ட் என்பவர் சப் கலெக்டராக இருந்தார். அந்தப் பிரெஞ்சுக்காரர் அவருடைய விருந்தாளியாகத் தங்கி இருந்தார். அவர் கும்பகோணம் வந்து ஆசிரியரைச் சந்தித்தார். ஜூலியன் வின்சன், ஆசிரியரைப் பற்றி அடிக்கடி சொல்வது உண்டு என்றும், தமிழுக்கு இவர் செய்துள்ள தொண்டைப் பற்றிச் சில நூல்களில் எழுதியிருப்பதாகவும் சொன்னார்.
தாம் புதுச்சேரி, காரைக்கால் போன்ற சில இடங்களுக்குச் செல்ல இருப்பதாகவும், ஆசிரியர் ஏதாவது ஒரு நூலைக் கொடுத்தால் போகுமிடங்களில் அதைப் படித்துவிட்டு, திரும்ப அதை அனுப்பிவிடுவதாகவும் அவர் சொன்னார்.