தோற்றுவாய்
பண்டுதொட்டு நந்தமிழ் மக்கள் பேசிவரும் மொழி அமிழ்தினுமினிய தமிழ்மொழியாகும். இன்று இரண்டரைக் கோடி மக்களால் இப் பைந்தமிழ் தாய்மொழியாகப் பேசப்பட்டு வருகிறது. ஆழிசூழ் இப்பூழியில் மக்கள் முதல் முதலாகப் பேசி இருக்கமாட்டார்கள். பல நூற்றாண்டுகளோ, ஆயிரம் ஆண்டுகளோ சென்ற பின்புதான் மக்கள் பேசியிருக்க வேண்டும்; மொழியும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் மொழி கடவுளால் உண்டாக்கப்பட்டதென்று நம் முன்னோர் முதலில் எண்ணினர்.
"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி
அதற்கு இணையாகத் தமிழ் மொழியைக்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்"
என்று சிவஞான முனிவர் பாடியிருப்பதைக் கொண்டு கடவுளே மொழியை உண்டாக்கியிருப்பார் என்ற கருத்து நம் நாட்டில் பண்டு நிலவி வந்ததை நாம் அறிவோம். ஆனால் மக்கள் முயற்சியால் மொழி உண்டாக்கப்பட்டது என்று நாம் கொள்ளுதலே சாலப் பொருந்தும். அடுத்து தமிழின் தோற்றம் குறித்து ஒருசில வரைவாம்.
தமிழின் தோற்றம்
தமிழ் என்னும் சொல்லுக்குப் பல பொருள் கூறுவதுண்டு. சகந்நாத பிள்ளை என்பவர் தமிழ் என்னும் சொல்