பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

135

களால் எத்துணையோ மாணவர் நலம் பெற்றார்களென்பதை இங்குக் குறிப்பிடாமலிருக்க இயலவில்லை.

ஞானியார் மாணவர் கழகத்தின் வாயிலாகப் பற்பல தமிழ் நூல்கள் பாடமாக நடத்தப்பெற்றன. அக்காலங்களில் குரு தரிசனம் குறித்தோ வேறு காரணம் பற்றியோ வரும் அன்பர்களும் தமிழ் நூல்களிற் பற்றுக்கொண்டு நூல்களைப் பயிலக் கருத்துக் கொள்ளவைத்த நிகழ்ச்சிகளும் உள. இன்னுமொரு நிகழ்ச்சியும் காண்போம்.

சமயம் வாய்த்தபோது தம் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்த ஸ்ரீபாடலேச்சுரர் தரும பாடசாலையில் ஒருவரை ஆசிரியராக நியமித்து, அவர் தொல்லையின்றி உணவு முதலிய பெற வாய்ப்பளித்தார்கள். அவரைப் போன்ற திருப்பாதிரிப் புலியூரினரான ஒரு அந்தணப் பிள்ளையும் பயில வந்தார். அவர்க்கும் அப்பள்ளியிலேயே நியமனமும் கிடைத்தது. இருவரும் குறிப்பிட்ட நேரங்களில் சுவாமிகளிடம் தனியே பயின்றனர். பின்னாளில் முன்னவர் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னவர் கடலூர் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியர்களாக நியமனம் பெற்றுச் சிறந்தார்கள்.

முன்னவர் திரு. க. ர. துரைசாமி அய்யர், பின்னவர் திரு. சங்கர அய்யர்.

ஏசடியார் என்பார் ஒருவர். அவர் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர். சுவாமிகளின் எளிவந்த தன்மை முதலியவற்றால் அவர்களையடைந்தார். நன்கு படித்தார். பின்னாளில் நெல்லிக் குப்பம் டேனிஷ் மிஷன் உயர் தொடக்கப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அவர் சைவர் போலவே தோற்றமளிப்பவராவர்.

திருப்பாதிரிப்புலியூரில் தீ. சொ. கிருஷ்ணப்ப செட்டியாரது பொருளுதவியினால் தேவார பாடசாலை நடந்து கொண்டிருந்தது. தேவார ஆசிரியராகத் திரு. மு. நடராஜ தேசிகரவர்கள் அமர்த்தப் பெற்றார்கள். அவர் சுவாமிகளிடம் நிரம்பிய அன்புகொண்டு, நாள்தோறும் மாலை நடைபெறும் பாடங்கட்கும் சுவாமிகள் ஆற்றும் சொற்பொழிவுகளுக்கும் வருவார். அவ்ர் தமிழ் பயில அவாமிக்குடையராய்ச் சுவாமிகளிடம் விண்ணப்பித்தபோது, அவருக்கும் தனியே பாடங் கற்பித்தார்கள். அவர் வித்துவான் தேர்வில் தேர்ந்து சிறந்தார். பின்னாளில் தேவார பாடசாலை நிறுத்தப்பட்டுவிட்டதால், அவர் திருவிடைமருதூரில் தேவார ஆசிரியராக இறுதிவரை பணியாற்றினார்.