பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

மக்சீம் கார்க்கி


தாய் தலையை அசைத்தாள். டாக்டர் விடுவிடென்று நடந்து வெளியே போனார். இகோர் தன் தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடினாள்; கை விரல்கள் பிசைந்துகொண்டிருப்பதைத் தவிர, அவனிடம் வேறு எந்த அசைவும் காணப்படவில்லை. அந்தச் சிறு அறையின் வெண்மையான சுவர்கள் ஏதோ ஒரு இனந்தெரியாத மங்கிய சோக பாவத்தையும் வறண்ட குளிர்ச்சியையும் வெளியிட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அங்கிருந்த பெரிய ஜன்னலின் வழியாக வெளியேயுள்ள மரங்களின் உச்சிக்கிளைகள் தெரிந்தன. இருண்டு மண்படிந்த அந்த இலைகளின் மத்தியிலே மஞ்சள் நிறப்பழுப்பு அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தது; இலையுதிர் காலத்தின் வரவை அது அறிவுறுத்தியது.

“மரணம் என்னை வேண்டா வெறுப்பாக, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு வருகிறது” என்று அசையாமலும் கண்களைத் திறவாமலும் சொன்னான் இகோர். “அவள் எனக்காக வருத்தப்படுகிறாள் என்பது எனக்கு நன்றாய்த் தெரிகிறது. நான் எல்லோருடனும் அவ்வளவு சுமூகமாகப் பழகினேன்!”

“பேச்சை நிறுத்து, இகோர் இவானவிச்” என்று அவனது கரத்தை வருடிக்கொண்டே மன்றாடிக் கேட்டுக்கொண்டாள் தாய்.

“கொஞ்சம் பொறு, நான் நிறுத்தி விடுகிறேன்....”

மிகுந்த சிரமத்தோடு அவன் மீண்டும் பேச முயன்றான். அவனுக்கு மூச்சுத் திணறியது. தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்குச் சக்தியற்று இடையிடையே பேச்சை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

“நீங்கள் எங்களோடு சேர்ந்திருப்பது ஒரு பெரிய மகத்தான காரியம். உங்கள் முகத்தைப் பார்ப்பதற்கே ஆனந்தமாயிருக்கிறது. சமயங்களில் நானாக நினைத்துக்கொள்வேன். இவள் கதி என்னவாகும்? நீங்களும் — எல்லோரையும் போலவே — ஒருநாள் சிறைக்குள் போவீர்கள். அதை நினைக்கும்போது எனக்கு உங்கள்மீது அனுதாபம் ஏற்படும். சரி, சிறைக்குப் போவதற்குப் பயப்படுகிறீர்களா?”

“இல்லை” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாள் அவள்.

“ஆமாம். நீங்கள் பயப்படமாட்டீர்கள். ஆனால், சிறைவாசம் ரொம்ப மோசமானது. சிறைவாசம்தான் என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டது. உண்மையைச் சொல்லப்போனால். நான் சாகவே விரும்பவில்லை....”

“நீ சாகப் போவதில்லை” என்று சொல்ல நினைத்தாள். ஆனால் அவனது முகத்தைப் பார்த்தவுடன் அவள் அதைச் சொல்லாமலேயே மௌனமானாள்.