பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

மக்சீம் கார்க்கி


“நன்றி, அம்மா!”

அவர்கள் இருவரது இதயங்களும் ஒன்றையொன்று நெருங்கிப் பழகிக்கொண்டதால் ஏற்பட்ட ஆனந்த வெறி அவளது தலைக்குள் காரமான மதுவெறியைப்போல் மேலோங்கிக்கிறங்கியது. அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவனது கையை மட்டும் பற்றிப் பிடித்தாள் அவள்.

வீட்டுக்கு வந்தவுடன் சாஷா தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். தாய் பாவெலைப் பார்த்துவிட்டு வரும் நாட்களிலெல்லாம் அவளும் வந்து செல்வது வழக்கம். அவள் பாவெலைப் பற்றி எதுவும் கேட்பதில்லை; தாயாகவே. அவனைப்பற்றி எதுவும் சொன்னால் கேட்பாள். இல்லாவிட்டால் தாயின் கண்களையே வெறித்து ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதோடு திருப்தியடைந்துவிடுவாள். ஆனால், இந்தத் தடவையோ அவள் ஆர்வத்தோடு வாய்விட்டுக் கேட்டுவிட்டாள்.

“சரி. அவன் எப்படி இருக்கிறான்?”

“நன்றாயிருக்கிறான்.”

“அவனிடம் அந்தச் சீட்டைக் கொடுத்து விட்டீர்களா?”

“ஆமாம். அதை அவன் கையில் மிகுந்த சாமர்த்தியத் தோடு கொடுத்துவிட்டேன்......”

“அவன் அதைப் படித்தானா?”

“அங்கேயா? அது எப்படி முடியும்?”

“ஆமாம் நான் மறந்துவிட்டேன்” என்று மெதுவாகக் கூறினாள் அந்தப் பெண். “நாம் இன்னும் ஒரு வார காலம் சரியாக ஒரு வாரகாலம் — முழுவதும் காத்திருக்க வேண்டும், இல்லையா? சரி, அவன் ஒத்துக்கொள்வான் என்று நினைக்கிறீர்களா?”

சாஷா முகத்தை நெரித்துச் சுழித்து, தாயையே கூர்ந்து நோக்கினாள்.

“நான் எப்படிச் சொல்லமுடியும்?” என்றாள் தாய். “இதில் ஒன்றும் ஆபத்தில்லையென்றால் அவன் ஏன் சம்மதிக்கக் கூடாது!”

சாஷா தன் தலையை உலுக்கிக்கொண்டாள்.

“சரி. இந்த நோயாளிக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? அவனுக்குப் பசியெடுத்துவிட்டது” என்றாள் அவள்,

“அவன் எதுவும் தின்னலாம். இரு, இதோ நான் போய்.....”