பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

387


மக்கள் முகஞ் சுழித்து அவநம்பிக்கையோடு அவனைப் பார்த்தார்கள். மௌனமாயிருந்தார்கள். கூட்டத்துக்குப் பின்னால் மட்டும் அமுங்கிப்போன குரலில் ஏதோ கசமுசப்பு எழுந்தது.

“விவசாயிகளே!” என்று சிரமப்பட்டு உரக்கப் பேசினான் ரீபின், “அந்தப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை நம்புங்கள். இதற்காக நான் உயிரையும் கூட இழக்க நேரிடலாம்; அவர்கள் என்னை அடித்தார்கள், சித்திரவதை செய்தார்கள். அவற்றை நான் எங்கிருந்து பெற்றேன் என்பதை என் வாயிலிருந்து கக்க வைக்க முயன்றார்கள்; மீண்டும் அடிப்பார்கள். ஆனால், நான் அதையும் தாங்கிக்கொள்ளத் தயார். ஏனெனில் அந்தப் பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளவை உண்மை - அந்த உண்மைதான் நமக்கு நம்முடைய அன்றாட உணவைவிட — அதி முக்கியமானதாக, அருமையானதாக இருக்க வேண்டும் அதுதான் சங்கதி!”

“அவன் இதையெல்லாம் ஏன் சொல்லுகிறான்” என்று முகப்பு வாசலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த முஜீக்குகளில் ஒருவன் கேட்டான்.

“எதைச் சொன்னால் என்ன? இப்போது எல்லாம் ஒன்றுதான்” என்று அந்த நீலக் கண்ணன் சொன்னான். “மனிதன் ஒரே ஒரு முறைதானே சாக முடியும்.”

அந்த ஜனங்கள் ஒரு வார்த்தை கூடட் பேசாது அங்கேயே நின்று தங்களது புருவங்களுக்குக் கீழாக உம்மென்று பார்த்தார்கள். கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒரு பார உணர்ச்சி அவர்களைக் கீழ் நோக்கி அழுத்திக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.

அந்தப் போலீஸ் ஸார்ஜெண்ட் அந்தக் கட்டிடத்துக்குள்ளிருந்த தட்டு தடுமாறிக்கொண்டே முகப்பு வாசலுக்கு வந்து சேர்ந்தான்.

“யாரங்கே பேசுகிறது” என்று அவன் குடிகாரனைப் போலக் கத்தினான்.

திடீரென்று அவன் விடுவிடென்று படிகளை விட்டிறங்கி, ரீபினிடம் போய் அவனுடைய தலைமயிரைப் பற்றிப் பிடித்து, தலையை முன்னும் பின்னும் இழுத்துக் குலுக்கிவிட்டான்.

“டேய்! நீதானா பேசினாய்? நாய்க்குப் பிறந்த பயலே” என்று அவன் கூச்சலிட்டான்.

ஜனக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முணுமுணுப்பு அலை பாய்ந்து பரவியது. நிராதரவான வேதனையுணர்ச்சியோடு தாய் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டாள். மீண்டும் ரீபினின் குரல் ஓங்கி ஒலித்தது: