பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

439


அவன் இக்நாதின் காலருகே குனிந்து காலுறைகளுக்குப் பதிலாக, காலில் சுற்றப்பட்டிருந்த அழுக்கடைந்த ஈரத் துணிகளை அவிழ்த்துவிட்டான்.

“வேண்டாம்” என்று வியப்போடு கூறியவாறே அந்த வாலிபன் தன் காலை இழுத்துக்கொண்டே, தாயை அதிசயத்தோடு பார்த்தான்.

“அவனது கால்களை கொஞ்சம் ஓட்கா மது தடவித் தேய்த்துவிடவேண்டும்” என்று அவன் தன்னைப் பார்த்ததைக் கவனிக்காமலேயே கூறினாள் தாய்.

“ஆமாம்” என்றான் நிகலாய்.

கலக்கத்தால் கனைத்து இருமிக்கொண்டான் இக்நாத்.

நிகலாய் அந்தச் சீட்டை எடுத்தான்; கசங்கியிருந்த அந்தச் சீட்டை நீட்டி நிமிர்த்தி தன் கண்களுக்கு அருகே கொண்டுபோய் அதை வாசித்தான்.

“அம்மா! எங்கள் இயக்கத்தை நீ கவனிக்காமல் விட்டுவிடாதே. உன்னோடு வந்தாளே, அந்த நெட்டைப் பெண் அவளிடம் சொல்லி, எங்களது காரியங்களைப் பற்றி இன்னும் அதிகமாக எழுதச் சொல், போய் வருகிறேன். ரீபின்.”

நிகலாய் சீட்டை வைத்துக்கொண்டிருந்த கையை மெதுவாகத் தளரவிட்டான்.

“எவ்வளவு மகத்தானது!” என்று அவன் முணுமுணுத்தான்.

தனது காலின் அழுக்கடைந்த விரல்களை ஜாக்கிரதையோடு தடவிப் பிடித்துக்கொடுத்தவாறே அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான் இக்நாத். தாய் தன் கண்ணில் பொங்கும் கண்ணீரை மறைக்க முயன்றுகொண்டே, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து அவனது காலையெடுப்பதற்காகக் கீழே குனிந்தாள்.

“ஊஹும், நீங்கள் செய்ய வேண்டாம்” என்று அவன் பயத்தோடு கத்திக்கொண்டு, காலை பெஞ்சுக்கடியில் இழுத்துக்கொண்டான்.

“நீ காலைக் கொடு. சீக்கிரம் வேலை முடியட்டும்”

“நான் கொஞ்சம் ஓட்கா கொண்டுவருகிறேன்” என்றான் நிகலாய்.

அந்தப் பையன் தன் காலை மேலும் உள்ளிழுத்துக்கொண்டான்.

“என்ன நினைத்துக்கொண்டீர்கள்? நான் என்ன ஆஸ்பத்திரியிலா இருக்கிறேன்?” என்று முணுமுணுத்தான்.

தாய் அவனது அடுத்த காலில் சுற்றப்பட்ட துணிகளை அவிழ்த்தெறிந்தாள்.