பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்லாமை

103


நிலம் போல் தோன்றியும் எத்தகைய பயனையும் தாராத களர் நிலம் போல், மக்களாகத் தோன்றினும் கல்லாதவர் பிறர்க்கு எவ்வகையிலும் பயன்படார்.

மாத்திரையர்-அளவினை உடையவ;; களர்-விளைவுக்குப் பயன்படாத உவர் நிலம். 406

7.நுண்மாண் நுழைபுலம் இல்லார் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

நுட்பமான சிறந்த நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் அறிவு இல்லாதவனுடைய நல்ல தோற்றத்தோடு கூடிய அழகு மண்ணினால் சிறப்பாகச் செய்யப்பட்ட பதுமையின் அழகுக்குச் சமமானது.

கல்வி உடலுக்கு உயிர் போன்றது. கல்வியில்லாத அழகால் பயன் இல்லை என்பது கருத்து.

நுண்மை-நுட்பம்; மாண்பு-சிறப்பு; நுழைபுலம்-ஆய்ந்து பார்க்கும் அறிவு; எழில்-தோற்றப் பொலிவு; புனைதல்-செய்தல்; பாவை- பதுமை, பொம்மை; அற்று- அத்தன்மையது. 407

8.நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

கற்றறிந்த நல்லவர்க்கு எற்பட்ட வறுமையைப் பார்க்கிலும், கல்வியறிவு இல்லாதவர்களிடம் தங்கியுள்ள செல்வம் துன்பத்தை விளைவிக்கும்.

கற்றவர் வறுமை, அவருக்கு மட்டும் துன்பத்தைதத் தரும். கல்லாதார் செல்வம் அவருக்கும், பிறர்க்கும் துன்பம் தருமாதலி்ன் நல்லவர் வறுமையினும் அது தீயது என்றார்.

நல்லார்-இங்கே கற்றாரைக் குறிக்கும்; கற்றார் கற்ற வண்ணம் ஒழுகுவார் என்னும் கருத்தால், 'நல்லார்’ என்றார். இன்னாது - கொடியது; திரு - செல்வம். 408

9.மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

கல்லாதவர் உயர்ந்த குடியிலே பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் தோன்றியும் கல்வி கற்றாருக்குச் சமமான பெருமையுடையவராக உலகத்தவரால் மதிக்கப்பட மாட்டார்.