பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

திருக்குறள்



சால்பாகிய பொன்னின் அளவை அறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனில், அது தமக்கு நிகரில்லாதவரிடமும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் குணமே ஆகும்.

கட்டளை-உரைகல், பொன்னின் தரத்தை அறிந்து கொள்ள உரைத்துப் பார்க்கும் கல்; துலை-சமம். 986

7.இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?

தமக்குத் தீமைகளைப் புரிபவர்க்கு இனிய செயல்களைச் செய்யா விட்டால் ‘சால்பு' என்னும் குணத்தால் உண்டாகக் கூடிய நல்ல பயன் வேறு என்னவாக இருத்தல் கூடும்?

இன்னா-தீயன; பயத்தது-பயனைத் தரக்கூடியது. 987

8.இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

சால்பு என்று சொல்லப்படும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத வறுமை நிலை இழிவானது அன்று.

இன்மை-பொருளின்மை, வறுமை; இளிவு-இழிவு; திண்மை-வலிமை; உறுதி. 988

9.ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

சான்றாண்மை என்னும் குணத்துக்குக் கடலைப் போன்றவ்ர் என்று புகழப்படுபவர் ஊழிக் காலத்தில் உலகமே நிலை மாறினாலும் தாம் தம் உயரிய கருத்து நிலையிலிருந்து மாற மாட்டார்.

ஊழி-பெருவெள்ளத்தால் உலகம் முடியும் காலம்; ஆழி-கடல். 989

10.சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

பல நற்குணங்களாலும் நிறைந்த சான்றோர் தம் தன்மையிலிருந்து குன்றுவாரானால், இந்தப் பெரிய உலகமானது தன்னுடைய பாரத்தைத் தாங்க முடியாததாகி விடும்.