பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கயமை

295


5.அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

கீழ்மக்களின் ஆசாரத்துக்குக் காரணமாக இருப்பது அச்சமே ஆகும். அஃது ஒழிந்தால் தம்மால் விரும்பப்படும் பொருள் அதனால் உண்டாகுமாயின் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

ஆசாரம்- சாத்திர முறைப்படி ஒழுகுதல், நன்னடக்கை; எச்சம்- ஒழிப்பு, எஞ்சி இருப்பது; அவா-ஆசை, பற்று. (இங்கே விரும்பும் பொருளைக் குறிக்கும்.) 1075

6.அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

கயவர் தாம் கேட்டறிந்த இரகசியமான செய்திகளைப் பிறருக்கு வலியச் சுமந்து சென்று சொல்லி வருவதால், அறையப்படும் பறையினைப் போன்றவர் ஆவர்.

அறைபறை அன்னர்- அறையப்படும் பறையினைப் போன்றவர்; மறை-இரகசியம்; உய்த்தல்-செலுத்துதல், சுமந்து செல்லுதல்.

பறையானது அடிக்கப்பட்டவுடன் பெரிதாக முழங்கி எல்லார்க்கும் உணர்த்துகிறது. அது போலக் கீழ்மக்களும் தம்மிடம் கூறப்பட்ட இரகசியச் செய்திகளை உடனே எல்லாரிடமும் சென்று கூறும் இயல்புடையவர் என்பது கருத்தாகும். 1076

7.ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூர்ங்கைய ரல்லா தவர்க்கு.

கன்னத்தை இடித்து உடைக்கும் வளைத்த கையை உடையவர் அல்லாதார்க்குக் கீழ்மக்கள் தாம் உணவுண்ட எச்சில் கையையும் கூட உதற மாட்டார்கள்.

ஈர்ங்கை - ஈரக்கை, எச்சிற் கை; கொடிது-கன்னம்; கூர்ங்கையர்-வளைந்த, முறுக்கிய கையையுடையவர்.

மெலிவார்க்கு யாதும் கொடார். துன்புறுத்துவார்க்கு. _எல்லாங் கொடுப்பார் என்பது கருத்து. 1077