225
'ஆள்தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டு'
எனவரும் அடியில் நம்பியாரூரர் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம்.
உலகியலிற் பேசப்படும் சாதி குலம் முதலிய வேற்றுமைக்கு இடமின்றி இறைவனுக்குத் தொண்டு பட்டாரனைவரையும் அன்பினாற் போற்றி வழிபடுதலே சிவநெறிச் செல்வர்கள் அனைவர்க்கும் உரிய தலையாய கடமை என்பதனை வற்புறுத்துவது "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு மடியேன்" எனத் தொடங்கும் திருத்தொண்டத்தொகைத் திருப்பதிகமாகும்.
சாதி மத வேறுபாட்டுக்கு இடமில்லாத பண்டைத் தமிழர் நெறியாகிய சிவநெறியின் தொன்மைச் சிறப்பினை அறிவுறுத்துவது இத்திருத்தொண்டத் தொகையாதலின் இதனைத் 'தொன்று சீர்த்திருத் தொண்டத் தொகை' யெனவும், 'தென்தமிழ்ப் பயனாய் வந்த திருத்தொண்டத் தொகை' யெனவும் சேக்கிழார் அடிகள் சிறப்பித்துப் போற்றியுள்ளார்.
நம்பியாரூரர் அருளிய இத்திருப்பதிகத்தில் தில்லை வாழ் அந்தணர் முதலாகத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஈறாகப் பல்வேறு குடும்பங்களில் தோன்றிப் பல்வேறு தொழில்களையுடையாராய் வாழ்ந்த அடியார்கள் அனைவரும் ஒத்த நிலையில் சிறப்பித்துப் போற்றப் பெற்றுள்ளமை காணலாம்.
திருவெண்ணெய்நல்லூர்ப் பெருமான் வேதியர் உருவில் தோன்றி வெண்ணெய் நல்லூர்ச் சபையில் - 'ஆரூரன் என் அடியான்' என ஆளோலை காட்டி வழக்குரைத்த போது, ஆதிசைவராகிய தாம் அவ்வேதி