53
பருகு சதாசிவம் என்பேன் சத்தி சிவம் என்பேன்
பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரம மென்பேன்
துருவு சுத்தப் பிரமம் என்பேன் துரிய நிறை வென்பேன்
சுத்தசிவம் என்பன் இவை சித்து விளையாட்டே.
எனத் தன் ஆருயிர்த் தலைவனாகிய இறைவன் பல்வகைச் சமயத்தாராலும் வழிபடப் பெறும் ஒருவனாகத் திகழும் உண்மையினைத் தலைவி தன் தோழிக்கு எடுத்துரைக்கின்றாள். அது கேட்ட தோழி ஞானப் பெருவெளியாகிய அம்பலத்திலே அருள் நடம் புரியும் நம் பெருமானுக்குப் புறச் சமயக்கடவுளர்களின் பெயர்களையும் நீ இயைத்துரைப்பது பொருந்துமா என வினவுகின்றாள். அவள் கேட்டவினாவுக்கு விடைகூறுவதாக அமைந்தது,
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிற்சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய்
பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எப்பெயர் ஒவ்வாதோ
அச்சமயத் தேவர் மட்டோ நின்பெயர் என்பெயரும்
அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே
சிற்சபையில் என்கணவர் செய்யும் ஒருஞானத்
திருக்கூத்துக் கண்டளவே தெளியும் இது தோழி
எனவரும் பாடலாகும்.