பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 167


என்று பாடுவதால் வலிமை பெறுதலைக் காணலாம். கண்டது செய்த பின்னரும் மிண்டுகின்ற நிலை ஏற்பட்டது என்றால், கண்டது செய்தலுக்குக் காரணம் அவன் திருவருளே என்பது பெறப்பட்டது.

தேகப் பிரக்ஞை இல்லாமல் பணிகளைச் செய்து வந்தாலும் ஒரோவழிச் சுயநினைவும், பொறிகளின் வெறியாட்டமும் வந்து தொல்லை தருதலை நினைந்து வருந்திய அடிகளார், பழைய திருப்பெருந்துறை அனுபவத்தை மீட்டும் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் முறையில் 'பண்டு தந்தாற்போல் பணிசெய்யப் பணித்து என்னை ஆட்கொள்வாய்’ என்று வேண்டுகிறார்.

திருப்பெருந்துறையில் குருநாதர் நேரே எழுந்தருளி இவற்றைச் செய்தார். அதனையே மறுபடியும் வேண்டுகின்ற அடிகளார், ‘ஐயனே! நேரே வந்து அருள்செய்ய வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. அதற்குப் பதிலாக நின் தொண்டர்கள் யாரேனும் ஒருவர் மூலம் என்னை அழைத்தாலும் போதுமானது’ என்பார்போலக் ‘கூவித்து’ என்றார்.

‘ஐயனே! என் மனத்தில் தோன்றியுள்ள குதுகுதுப்பு (குறுகுறுப்பு), அம்மனம் ஒருநிலைப்படாத காரணத்தால் என் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது. அதனைக் களைந்தருள்க’ என்கிறார்.


138.

 
குதுகுதுப்பு இன்றி நின்று என் குறிப்பே
      செய்து நின் குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய்
      விரை ஆர்ந்து இனிய
மது மதுப் போன்று என்னை வாழைப்
      பழத்தின் மனம் கனிவித்து
எதிர்வது எப்போது பயில்விக்
     கயிலைப் பரம்பரனே 34