பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 217


இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய் 9

பிரானாக-தலைவனாக. பாங்கு-உரிமை. தொழும்பு-அடிமை.

சென்ற எட்டுப் பாடல்களும் உறங்கியவள் கூற்றாகவும் அவளை எழுப்புவோர் கூற்றாகவும் அமைந்துள்ளன. அவ்வாறு அமையாமல் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இறைவனை வேண்டுதலை இப்பாடல் பேசுகிறது. உள்ளே இருப்பவள், வெளியே இருப்பவர் என்ற வேறுபாடற்று ஒரு நோக்கத்துடன் ஒரே குரலில் அனைவரும் ஒன்றாகவே பேசுவதை இப்பாடல் வெளியிடுகின்றது.

பாடலின் முதலடி இறை இலக்கணத்தை மிகச் சிறப்பாகப் பேசுகின்றது. பழமை, புதுமை என்ற சொற்கள் ஒப்புநோக்குச் சொற்களே அன்றித் தனித்துவம் வாய்ந்தவை அல்ல. காலம் என்ற ஒன்று இடையீடின்றிச் செல்வதாகும். காலத்திற்குத் தோற்றமோ முடிவோ இல்லை. அதனாலேயே இறைவனைக் காலமே! உனை என்றுகொல் காண்பதே (திருவாச:47) என்று முன்னரும் அடிகளார் கூறியுள்ளார்.

இந்தக் கால ஓட்டத்தில் நேற்றுத் தோன்றியவை இன்று பழமையாகவும், இன்று தோன்றியவை அடுத்த விநாடியே பழைமையானவையாகவும், நாளை தோன்றப் போகின்றவை புதுமையானவையாகவும் பேசப் பெறுகின்றன. வேறு வகையாகக் கூறினால், பழமையை இறந்த காலம் என்றும், புதுமையை எதிர்காலம் என்றும் கூறுவதில் தவறில்லை. எந்த ஒன்றும் இந்த விநாடி தோன்றுகிறது என்றால், அது தோன்றிவிட்ட நிலையில் இறந்த காலமாகவும், தோன்றுவதற்கு முன்னர் எதிர் காலமாகவும் இருத்தலின் பழமை, புதுமை என்பன இந்த இரண்டு காலங்களுள் அடங்கிவிடுகின்றன.