பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



பெருந்துறை நாயகன் நீத்தும் சென்றுவிட்டான் என்றால் அதை மேலே கூறிய இரண்டு காரணங்களில் எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்று அடிகளார் சிந்திக்கத் தயாரில்லை. என்றாலும் அவன் போய் விட்டான் என்ற உண்மை மனத்தை உறுத்திற்று. எனவேதான், எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த நிலையிலும், என்னை விட்டுவிடலாகாது என்ற கருத்தில் ஐம்பது பாடல்கள் பாடுகிறார்.

தம்மைக் கைவிட்டுவிட வேண்டா என்று இறைவனை வேண்டிக்கொள்கின்ற கருத்தைப் பலரும் பாடியுள்ளனர். ஆனால், இந்த ஒரே கருத்தை ஐம்பது பாடல்களிலும் மையமாக வைத்துப் பாடிய பெருமை, சமய இலக்கிய உலகில் அடிகளார் ஒருவருக்கே உரியதாகும். ஒவ்வொரு பாடலிலும் 'விட்டுவிடாதே’ என்று கூறுவதால், இந்த ஐம்பது பாடல்களும் ஒரு தொகுப்பாயிற்று.

சதகத்தின் முடிவில் 'அழுதால் உன்னைப் பெறலாமே' (திருவாச. 94) என்று பாடியவர் மறுபடியும் தளர்ச்சி அடைகிறார். 'உன்னைப் பெறலாம்' என்ற நம்பிக்கை தளர்வதற்குக் காரணம் ஒன்று உண்டு.

எதிர்பாராமல் பெற்ற அனுபவம் ஒருமுறை கைவிட்டுப் போனமையின் அழுது அவன் அருளைப் பெற்றாலும், மறுபடியும் அது கை நழுவிப் போய்விடுமோ என்ற அச்சமும் தளர்ச்சியும் தோன்றுகின்றன. மனத்திட்பமும் தளர்ச்சியும் மாறி மாறி வருவதைச் சதகம் முழுவதிலும் காணமுடிகிறது. எந்த உயர்ந்த நிலையை ஒருவர் அடைந்துவிட்டாலும், மனித உடலுடன் இந்த உலகில் இருக்கின்ற வரை, இந்தத் திட்பமும் தளர்ச்சியும் இருக்கத்தான் செய்யும். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாவிட்டால் மாறி மாறி வருகின்ற எண்ணப் போக்கைத் தெரிவிக்கும் பாடல்களைச் செம்மையான முறையில் புரிந்துகொள்ள இயலாது.