பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கூறுவதால் அவனுடைய தாயன்பை நினைந்து உருகினாராயிற்று.

‘குற்றங் களைந்து குணங்கொண்டு கோதாட்டி’ என்றால் என்ன? இதற்கு விளக்கம் ‘கல்லா மனத்து’ (175) என்று தொடங்கும் பாடலில் விரிவாகப் பேசப்பெறுகிறது. கல்லைப் பிசைந்து கனியாக்குதல் என்பது உலகியலில் நடைபெறாத ஒன்று. கல், பிசையக்கூடிய பொருளன்று. பிசையக்கூடிய பொருள் எதுவும் கனியாக மாறுவதில்லை. அப்படியிருக்க, கல்லுக்கு நிகராக உள்ள தம் மனத்தைப் பிசைந்து கனியாக்கினான் என்கிறார். கல்லைப் பிசையக்கூடிய ஒருவன் வல்லாளனாய்த்தான் இருத்தல் வேண்டும். 'உருகா மனம், சிவஞானம் உணரா அறிவு' ஆகியவை கல்போன்றவையாம். இப்படிப்பட்ட மனத்தையும் கனியாக்கவேண்டுமானால் முதலில் ஆணவத்தைச் செயலிழக்கச் செய்யவேண்டும். அதுவும் இறைவன் துணைகொண்டு நடைபெறுதலின் 'பிசைந்து’ எனறார்.

மிகப் பெரிய அறுவை மருத்துவம் மேற்கொள்வதற்கு முன்னர், மயக்க மருந்து தருவதுபோல ஆணவத்தோடு இணைந்திருக்கின்ற மனத்தைக் கனிவிக்க வேண்டுமாயின் அந்த மனத்தை ஆணவத்திலிருந்து பிரிக்கவேண்டும். பெருந்துறை வல்லாளனனுக்கு இந்த இரகசியம் தெரியுமாதலால், இந்த மனத்தைப் பற்றியிருக்கும் ஆணவத்தை முதலில் செயலிழக்கச் செய்தான் என்பதைப் 'பிச்சேற்றி' என்ற சொல்லைச் சொல்வதன் மூலம் குறிப்பிடுகின்றார்.

‘தான்’ என்பதை இழந்தவர்கள்மட்டுமே தம்மிலிருந்து மனத்தைப் பிரித்துவைக்க முடியும். பிச்சேற்றுவதன்மூலம் தான் என்பதை ஒழித்த குருநாதர், மனமாகிய கல்லைப் பிசைந்து கனியாக்கினார் என்றார்.