திருக்கோவலூர்த் தீங்கரும்பு
205
புலனாகும். திருக்கோவலூர் மன்னனாகிய மலையமான் அந்த ஊர் எம்பெருமான் மீது கொண்டிருந்த அன்பு,
‘பொற்புடைய மலையரையன் பணிய நின்ற
பூங்கோவ லூர்”[1]
என்ற ஆழ்வாரின் பாசுரப் பகுதியால் அறியலாகும். ‘மலையரையன்’ என்பதற்கு ‘மலையமான்களை’ என்று உரை வகுத்துள்ளார் பெரியவாச்சான் பிள்ளை.[2] திருமங்கையாழ்வார் வாழ்ந்த காலத்தில் திருமுடிக்காரியின் வழியினர் வாழ்ந்தனர் என்பது இதனால் பெறப்படும் உண்மையாகும்.
‘முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்டு திகிரி ஏந்திய தோளே.”[3]
என்ற புறப்பாடற் பகுதியால் இவ்வூரை அதியமான் நெடுமானஞ்சி போரில் அழித்து வென்ற செய்தியை அறியலாகும்.
மேலும், பாரிமகளிர் அங்கவை சங்கவை என்பவர்களை மணம் புரிந்த தெய்வீகன் என்ற அரசன் அரசோச்சிய இடம் திருக்கோவலூர் ஆகும். இவன்வழி வந்தவர்களே மெய்ப் பொருள் நாயனார், நரசிங்க முனையரையர் முதலியவர்கள். இந்தத் தெய்வீகனோ மலையமான் திருமுடிக்காரியின் வழித் தோன்றல். பாரிமகளிரின் திருமணம் முடிந்து பின்னர் கபிலர் இத்திருக்கோவலூரிலேயே ஒரு பாறை மீது எரி வளர்த்து அதில் வீழ்ந்து முக்தி அடைந்தார் என்பது வரலாறு.
“வன்கரை பொருது வருபுனல் பெண்னை
தென்கரை உள்ளது தீர்த்தத் துறையது
மொய்வைத்து இயலும் முத்தமிழ் நான்மைத்
தெய்வக் கவிதை செஞ்சொற் கபிலன்
மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலம்
பெண்ணை மலையற்கு உதவி.......