66 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்
உள்ளன. ஆயினும், பெரிய காஞ்சியில்தான் அதிகமான சிவாலயங்கள் இருக்கின்றன. சுமார் முப்பதுக்கு மேற்பட்ட சிவாலயங்களும், இருபதுக்கும் மேற்பட்ட திருமால் திருக்கோயில்களும் இந்த இரு பகுதிகளிலும் இருப்பனவாகத் தெரிகின்றது.
காஞ்சியில் பதினெட்டு திவ்விய தேசங்கள் உள்ளனவாக வைணவர்களிடையே வழங்கும் பேச்சு ஒன்று உண்டு. ஆயினும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திவ்விய தேசங்கள் பதினான்கே காஞ்சியில் உள்ளன. இவற்றைத் தவிர, காஞ்சிமா நகருக்குப் புறம்பே சுமார் ஏழுகல் தொலைவில் உள்ள ‘திருப்புட்குழி என்ற திவ்விய தேசமும் ஆழ்வாரால் மங்களாசாசனம் பெற்றது. இன்று நாம் காஞ்சி நகரில் சிறியனவும் பெரியனவுமாகவுள்ள திவ்விய தேசங்களில் திருப்பாடகம், திருநிலாத்திங்கள் துண்டம், திருக்கள்வனுர், திருவேளுக்கை, திருத்தண்கா, திருப்பவளவண்ணம் ஆகிய ஆறு திவ்விய தேசங்களையும், நகருக்குப் புறம்பேயுள்ள திருப்புட்குழியையும் சேவிக்கப் போகின்றோம்.
திருப்பாடகம் : நாம் தங்கியிருக்கும் ஞானப் பிரகாசர் திருமடத்திற்கு அருகிலுள்ளது இந்தச் சந்நிதி. இது ‘பாண்டவதுதர் சந்நிதி’ என்று வழங்கப்பெறுகின்றது. பாடு+அகம், பாடகம் ஆயிற்று. பெருமை தோற்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்பது இதன் பொருள். கண்ணன் கழுத்தில் ஒலை கட்டிக்கொண்டு பாண்டவத் துதனாய் துரியோதனனிடம் சென்றபொழுது அக்கோமகன் இரகசியமாகத் தன் சபாமண்டபத்தில் மிகப்பெரிய நிலவறை யொன்றை நிறுவி அதன் உள்ளே அநேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் நிறுத்தினான். அப்படுகுழியைப் பிறர் அறியாவண்ணம் மூங்கிற் பிளப்புக்களால் மேலே மூடச் செய்தான். அதன்மீது நவரத்தினங்கள் இழைக்கப்பெற்ற சிறந்த ஆசனம் ஒன்றை அமைத்து அதன்மீது கண்ணனை வீற்றிருக்கச் செய்தான். கண்ணனைக் கொல்வதற்காகத் துரியோதனன் செய்த சதித் திட்டம் இது. கண்ணன் அதன்மீது ஏறியதும் மூங்கிற் பிளப்புகள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையில் செல்லுங்கால், அப்பெருமான் மிகப்பெரிதான உருவம் எடுத்துப் பல கைகளையும் கால்களையும் கொண்டு மல்லர்களை எதிர்த்து அவர்களைக் கொன்றொழித்தார். இந்தப் பெரிய திருமேனியை,
‘அரவநீள் கொடியோன் அவையுள்ஆ சனத்தை
அஞ்சிடாதேஇட அதற்கு