பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / சொல்லாத ஒன்று! 449

“என்ன கண்ணு? ஏன்?”

“ஒரே நாத்தமா இருக்குது தாத்தா.”

“நாத்தமாவது, ஒண்ணாவது; எனக்குத் தெரியலியே, அம்மா?”

“இல்லே தாத்தா நாறுது” பிடிவாதமாகச் சொன்னாள்.

“ஒண்னும் நாறாது. நீ மிட்டாயைத் தின்னு.”

கிழவன் மிட்டாய்ப் பொட்டலத்தைக் கீழே இருந்து சிறுமியின் கையில் எடுத்துக் கொடுத்துவிட்டுப் பேச்சைக் கேட்பதில் கவனம் செலுத்தினான். சொற்பொழிவாளர் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

“தாத்தா தாத்தா அதோ பாரேன்!” சிறுமி அவருடைய கவனத்தை இழுத்தாள்.

“எங்கே கண்ணு பார்க்கச் சொல்றே”

"அதோ அங்கே!. சாக்கடைக்கு அந்தப் பக்கமா மைதானத்து வேலியை ஒட்டினாற்போலப் பாரு”

"அங்கே என்னவாம்? கூட்டம் நடக்குது பேசுறாங்க. உனக்குப் புரிஞ்சா நீயும் கேக்கலாம்.”

“அது இல்லே தாத்தா இன்னும் நல்லாப் பாரு' சிறுமி தன் கையை நீட்டிச் சுட்டிக் காட்டினாள். கிழவனுக்குக் கண்பார்வை கொஞ்சம் மங்கல். 'குழந்தை சொல்கிறாளே! ஒன்றுமில்லாமல் சொல்லமாட்டாள்' என்று அவளை மடியிலிருந்து கீழே இறக்கிவிட்டு நான்கைந்து அடி முன்னால் நடந்து போய் உற்றுப் பார்த்தான். அந்த இடத்தில் ஒரு பெரிய நாய் செத்துக் கிடந்தது. கிழவன் நாற்றம் பொறுக்க முடியாமல் மூக்கைப் பிடித்தான். குழந்தைக்கு இருக்கும் அறிவுக்கூர்மையை வியந்து கொண்டான்.

குழந்தை இவ்வளவு சுலபமாக இந்த நாற்றத்தை உணர்ந்து கொண்டாளே? என் மூக்கில் மட்டும் இது ஏன் இவ்வளவு நாழிகை உறைக்கவில்லை? இப்படித் தனக்குத் தானே நினைத்துக் கொண்டபோது அவனுக்கு வெட்கமாக இருந்தது. வெட்கந்தானே தவிர ஆச்சரியப்படவில்லை காரணம்? அங்கே அப்படிச் செத்துக்கிடப்பதெல்லாம் சர்வ சாதாரணம்! புதுமையும் அல்ல. நாய் என்ன பிரமாதம்? சில சமயங்களில் மனிதர்களே அந்த நிலையில் கிடப்பது உண்டு. போலீஸ் வரும்; விசாரணைகள் தடபுடல் படும். அப்படிப்பட்ட ஒரு வட்டாரம் அது. கிழவன் திரும்பி வந்து குழந்தையை முன்போல் மடியில் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தான்.

“என்ன தாத்தா? பார்த்தியா அதை?”

"பார்த்தேன். நாய் செத்துக் கிடக்கு!”

"அதுதான் நாறுது, தாத்தா!

“சரி, சரி, நீ மிட்டாயைத் தின்னு; அது கிடக்குது”

நா.பா. 1 - 29