254
நித்திலவல்லி / இரண்டாம் பாகம்
"பெண்ணே, நீ யார்? வெட்கமும் கூச்சமுமில்லாமல் வெறும் இச்சை மட்டுமே உடைய முதற் பெண்ணை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.”
“வெட்கமும், கூச்சமும் எல்லாம் வெறும் போர்வைகள்! என் போன்ற அழகின் அரசிகளுக்கு அவை தேவை இல்லை!”
அவள் குரல் இனிமையாக இருந்தாலும், களப்பிரர் பேசும் தமிழின் முதிராத மழலைத் தன்மை அதில் இருப்பதைத் தென்னவன் மாறன் கண்டான். அவனுக்குக் கோபம் மூண்டாலும், அதை அடக்கிக் கொண்டு —
“அம்மா, அழகின் அரசியே! உன் பெயர் என்ன என்று நான் அறியலாமா?”
“காம மஞ்சரி.”
“உன்னைப் பொறுத்த வரை முற்றிலும் பொருத்தமான பெயர்தான். உன்னிடம் காமம் மட்டும்தான் ஒன்று சேர்ந்து இணைந்திருக்கிறது. பெண்ணை நான் தாயாகப் பார்த்திருக்கிறேன். இன்றுதான் முதன் முதலாக வெறும் காமமாகப் பார்க்கிறேன்.”
“ஒரு தமிழன்தான் இப்படிப் பஞ்சணையிலும் வேதாந்தம் பேச முடியும்!”
“ஒரு களப்பிரப் பெண்தான் இப்படி முன்பின் தெரியாதவனிடமே, பார்த்த மறுகணம் பஞ்சணையைப் பற்றிப் பேச முடியும்...”
— இதற்கு மறுமொழி கூறாமல் எழுந்து, அவனருகே ஒவியம் நடப்பது போல் நடந்து வந்து தழுவிக் கொள்வது போல் நெருங்கிய அவளை, அருகே நெருங்க விடாமல் தடுத்தான் அவன்:
“பெண்ணே! என்னை நீ மிக எளிமையாக ஏமாற்றி விட முடியாது. நான் கோநகரங்களின் மிருதுவான சுபாவங்களை உடைய மென்மையான மனத்தினன் இல்லை. காட்டு மனிதன். அழகு, வசீகரம், மயக்கம் போன்ற மெல்லிய உணர்ச்சிகளால் என்னை வசப்படுத்தி ஒற்றறிய உங்கள்