பக்கம்:நித்திலவல்லி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

55



இப்படிச் செல்வப்பூங்கோதை மறுமொழி கூறி முடிப்பதற்குள், அந்துவனே முந்திக்கொண்டு-

“ஆமாம், ஐயா! என்னைப் படைத்த கடவுளே அழ வைக்கவேண்டும் என்று நினைத்தாலும், அவரால்கூட அதைச் செய்யவே முடியாது. என்னைப் படைத்த மறு விநாடியிலிருந்தே நான் அவரைப் பார்த்து இப்படித்தான் சிரித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். இந்த முதற் பேச்சிலேயே இளையநம்பிக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. பிறவியில் நேர்ந்துவிட்ட ஓர் அவலட்சணத்துக்காக மனம் மறுகி மாய்ந்து கொண்டிராமல், தன்னம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் வாழ்கிற அவனை மிகவும் விரும்பி வரவேற்றான் இளையநம்பி. எப்படிப்பட்டவனாலும் அந்த யானைப் பாகனைத் துயரப்படச் செய்யமுடியாது என்று தோன்றியது. செல்வப் பூங்கோதையும் அவள் அன்னையும் இளைய நம்பிடம் விடை பெற்றனர்.

“இனி உங்களையும், உங்கள் காரியங்களையும் அந்துவனின் பொறுப்பில் விட்டு விட்டு நாங்கள் விடை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆலயத்தில் வழிபாட்டை முடித்துக் கொண்டு இரவோடிரவாகவே நாங்கள் வண்டிகளோடு திருமோகூர் திரும்ப வேண்டியிருக்கும்.”

“பெரிய காராளருக்கும், அவருடைய புதல்வியாகிய உனக்கும் நான் எவ்வளவோ நன்றிக்கடன்...” என்று உபசாரமாக அவன் தொடங்கிய பேச்சை இடைமறித்து-

“அப்படி எல்லாம் நன்றி சொல்லி, இன்றோடு கணக்குத் தீர்த்து விடாதீர்கள். நமக்குள் இன்னும் எவ்வளவோ பல உதவிகளைத் தரவும் பெறவும் வேண்டும்! நெருங்கிப் பழக வேண்டியவர்கள், நட்பும் பகையும் அற்ற நொது மலர்களைப் போல் நன்றி சொல்லிக்கொண்டு போய் விடக் கூடாது” என்றாள் பெரிய காராளரின் மனைவி. அவனும் அதை ஒப்புக் கொள்வதுபோல், மலர்ந்த முகத்தோடு அவர்களுக்கு விடை கொடுத்தான். நந்தவனத்தில் இருந்து அவர்கள் ஆலயத்திற்குள் சென்ற பின், யானைப் பாகன் அந்துவன் இளைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/56&oldid=945243" இலிருந்து மீள்விக்கப்பட்டது