பக்கம்:நூறாசிரியம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46 மருட்கை யுன் துணிவே


அம்ம, வாழி தோழி! நின் காதல்
இம்மா நிலத்தும் பெரிதே பொழிந்த
விசும்பின் தூய்தே, கதிரின் செவ்விது;
மணியின் காழ்த்தது; பனியின் தண்ணிது;
அறவோர் நெஞ்சினும் அகன்றது; நெறியின் 5
துறவோர் உளத்தினுந் திண்ணிது; மறவன்
கொடுங்கை அம்பினுங் கூரிதே அவன்றன்
நெடுங்குறி யெய்பினும் நேரிதே புலவர்
தடையறு கற்பனை மடையி னாழ்ந்தது;
கொடையருள் நெஞ்சினும் புடைநணி கனிந்தது; 10
நிணநீர்ப் பெருக்கி முரசுத்தலை செருக்கிப்
பணைக்கால் அலைத்த பருங்கூர்ங் கோட்டின்
களிறு வீழ்த்திய வரியினுந் துணிந்ததே!
குலந்தரு பிரிவைக் குலைத்ததுன் வளைக்கை!
அலர்தலை மிதித்துத் துமித்ததுன் அணிகழல்! 15
இழிநோக் கெரித்ததுன் எரியுமிழ் இணைவிழி!
பழியறத் துடைத்ததுன் பண்புறு நெஞ்சம்!
செங்கால் நாரையின் தூங்கி யிருந்து,
நுங்குறி பற்றினை; மருட்கையுன் றுணிவே!
சான்றவர் பாங்கின் ஊன்றிய நெஞ்சும் 20
தோன்றுயர் வினையின் நான்றிய உணர்வும்
தாழ்வறப் பெற்றோன் தடந்தோள்
வாழ்வெனப் பற்றி வரைந்தனை கொண்டே!

பொழிப்பு:

அம்ம! தோழியே! நீ என்றும் வாழ்வாயாக! நினது காதல் இவ்வுலகை விடப் பெரியது; நிறைந்து பெய்த மழைக்குப் பின்னுள்ள விசும்பைப் போல் தூயது. ஒளிக்கதிரைவிடச் செவ்வையானது, வயிரத்தைவிட உறுதியானது; பனியை விடக் குளிர்ந்தது, அறம் பேணுவார் நெஞ்சைவிட விரிந்து அகன்றது; நன்னெறியில் துறந்தார் உள்ளத்தைவிடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/236&oldid=1209074" இலிருந்து மீள்விக்கப்பட்டது