உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

நெருப்புத் தடயங்கள்


வீட்டு வாசலுக்கு மகுடம் சூட்டப்பட்டதுபோல் வாழை மரங்கள், இரு பக்கமும் குலை தள்ளி நிற்க, வெண்பட்டுப் பரப்பும், சிவப்புக் கரையும் கொண்ட துணி கட்டிய பந்தலைத் தாண்டி, வீட்டுக்குள் நுழைந்தான். உடனே, "இன்ஸ்பெக்டர் வந்துட்டார், இன்ஸ்பெக்டர் வந்துட்டார்" என்ற சப்த அலைகள். ஜரிகை வேட்டியோடும், ஜிகினாத் துண்டோடும் பளபளத்த முத்துலிங்கம் ஓடி வந்து அவன் சூட்கேசை வாங்கிக் கொண்டார். அவர் மனைவி வந்து "சீக்கிரமாய் வரப்படாதா? தாலி கட்டியாச்சு. ஒங்களத்தான், இவங்க தன்னோட கல்யாணத்துக்காவது வருவாங்களா?" என்று தமாஷ் செய்தாள். அப்பாக்காரர் வந்து, அவனைப் பாசத்தோடு பார்த்தார்.

பந்தலிட்ட முற்றத்தில் நாற்காலிகளில் அமர்ந்திருந்த பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா, லோகல் அரசியல்வாதிகள், அதே அந்த பாதிரியார் உட்பட பல பெரிய தலைகள், அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றன. எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த ஒரு சில பெருந்தலைகளின் விலாக்களை இடித்து, "இன்ஸ்பெக்டரய்யா... இன்ஸ்பெக்டர்" என்று எழுப்பினார்கள். தாமோதரன் தங்களுக்கு வேண்டியவன் என்பதைக் காட்டும் வகையில், கூட்டத்தை ஒரு தடவையும், அவனை மறு தடவையும் பார்த்தபடி, எல்லோரும் ஒரே சமயம் பேசினார்கள்.

முத்துலிங்கம், தம்பியைப் பெருமையோடு பார்த்தபடி "சீக்கிரமாய் வரப்படாதுப்பா? ஒனக்காக எவ்வளவோ லேட் பண்ணிப் பார்த்தோம். சப்-இன்ஸ்பெக்டர் கூட, ஒனக்காகக் காத்திருந்திட்டு இப்போ தான் போறாரு..." என்றார். உடனே அவர் மனைவி "வந்ததும் வராததுமாய் அவங்கள ஏன் நச்சரிக்கிறீய? ஒங்க தம்பியை சாப்பிட வரச் சொல்லுங்க..." என்றாள்.

தாமோதரன், தன்னிடம் உபசரிப்பு வார்த்தைகளைப் பேசியவர்களைப் பார்த்து, புரிந்தும் புரியாமலும் தலையை