உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

39

“ராஞ்சியில் பல நாட்கள் கஷ்டப்பட்ட பின், குழந்தை பிரகாஷ் அகாலத்தில் காலமாயிற்று. அப்போது நான் தில்லியில் இருந்தேன். தொலைபேசி மூலமாக குழந்தையின் அபாயச் செய்தி வந்தது. புறப்பட்டுக் கொண்டிருந்தேன். இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. அவனுடைய அண்ணன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செத்துப் போனான். அந்தக் காயம் இன்னும் ஆறவில்லை. அந்த எண்ணம் மீண்டும் நினைவில் நிழலாடியதாலே கண்களில் நீர் நிறைகின்றது. இப்போது, இந்த இரண்டாவது காயம். இதைத் தவிர்க்க வழியில்லை. தெய்வ சித்தம் இது. குழந்தைகள் இப்படி வந்து போக வேண்டுமானால், அவர்கள் ஏன்தான் வருகிறார்களோ? இதுவும் கடவுளின் திருவிளையாடலே. இதன் ரகசியத்தை அவனே அறிவான். அவனுடைய லீலைகளை நாம் புரிந்து கொள்ள முடியாது.

இராஜேந்திர பிரசாத், முதல் குடியரசுத் தலைவரான பிறகும், அவரது வாழ்க்கை முறையே மாறவில்லை. எப்போதும் போல எளிய வாழ்க்கையே நடத்தினார் குழந்தைகளோடு விளையாடுவது என்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். நாட்டுப் பணிகளோடு வீட்டுப் பணிகளையும் அவர் தவறாமல் கவனித்துக் கொண்டார்.

தனது தமையனார் மறைந்த பின்பு அவருடைய குடும்பத்தின் பொறுப்புகளையும் இராஜேந்திரரே ஏற்றுக் கொண்டார். தேச சேவை எப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வேள்விச் சாலையில் எழும் ஒளியோ, அதனைப் போலவே ஒவ்வொரு குடிமகனின் குடும்பச் சேவையையும் ஒரு தவச்சாலையாக ஆற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தனது இல்லத்துச் சேவைப் பணிகளை தவச் சாலையாக மாற்றிக் கொண்ட புனிதராகவே வாழ்ந்தவர்.