118
லா. ச. ராமாமிருதம்
கடலினும் பெரிய உண்மைகளும், மதிப்பீடுகளும், போதனைகளும் பழமொழிகளில் தெளிந்த தைரியங்களிலும் உவமைகளில் இழுத்துப் பிடித்த சொற்கட்டுகளிலும்தான் அடைத்து வைத்திருக்கின்றன.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல்' - இந்த உவமையை வரப்ரஸாதம் உள்ளவன்தான் வழங்க முடியும்.
"தீயினாற் சுட்டபுண் உள் ஆறும்
ஆறாதே நாவினாற் சுட்டவடு”
இதன் அனாயாஸத்தையும்
'ஆறாதே'இன் கடை எழுத்தின் ஏகாரத்தில் ஏற்றியிருக்கும் பயங்கரத்தையும்
வடுவின் உள்சிறலையும், மன்னிப்பற்ற கோபத்தையும் ஓயாத புழுக்கத்தையும், நினைத்துப் பார்க்க உள்ளவர்க்கு இப்பவும் காலடியில் பூமி கிடுகிடுக்கும்.
சொன்னவன் சொல்லிவிட்டு, அவன் மேல் மண்ணும் எண்ணற்ற முறை புரண்டு போயாச்சு. ஆனால் அவனுடைய சொற்கோபம், சொல் சாந்தம். அவன் காட்டிய உவமைகளில், அல்லது உவமைகளால், இன்னும் எள்ளளவும் குன்றாமல், புழக்கத்திலும் மிச்ச நேரத்துக்கு அண்டகோசத்திலும் நீந்திக்கொண்டிருக்கின்றன.
உவமைகளில்தான் பாஷையின் ராஸ லீலை.
பண்பு என்கிற சொல் அடிக்கடி இங்கு நேர்ந்து கொண்டிருக்கிறது. பண்பு என்றால் என்ன?
எண்ணம், வாக்கு, செயல் மூன்றிலும் பரம்பரையாக சாதகபூர்வமாக ஏறும் மெருகுதான் திரும்பத்