13
ப்ளேக் — Plague
இந்த பயங்கர நோயை நாட்டை விட்டே அடியோடு விரட்டிவிட்டதாக இடையே பத்திரிகைகளில் அரசாங்கத்தின் கொக்கரிப்பு. மார்தட்டல், அடிபட்டதாக எனக்கு நினைப்பு. இதன் உண்மை, தற்போதைய நிலவரம் அறியேன். சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர், அதனால் அடிபட்டுவிட்ட என் பெற்றோர் வாயிலாக விட்டுவிட்டுத் தெரிந்துகொண்டதைச் சொல்கிறேன்.
பெங்களூர், கோயமுத்தூர்தான் Plagueக்குப் பேர் போனதாம். சுவரோரம் எலி செத்துக்கிடந்தது அங்கே, இங்கே என்று தகவலாகவோ, வதந்தியாகவோ கேட்டாலே போதும். ஜனங்கள் வீடுகளைக் காலி பண்ணிக்கொண்டு தெருவே வெறிச்சோடிவிடுமாம். ஆனால் நோயின் விபரீதத்தை முற்றும் உணராமையால் என் பெற்றோர்கள் அஜாக்கிரதையாக இருந்துவிட்டனரோ, இல்லை - அண்டை வீட்டார் என்ன செய்கிறார்கள் பார்த்துக்கொண்டு நாமும் நடக்கலாம் என்று தயங்கினார்களோ, என்னவோ, சுப்ரமணியணுக்கு ஜுரம் கண்டுவிட்டது.
கடுமையான காய்ச்சலில் ஆரம்பிக்கும் இந்நோயின் போக்கு எப்படி என்று அண்ணாவின் கண்ணீரில் கலந்த வார்த்தையில் என் சிறு வயதில் கேட்டிருக்-