பக்கம்:பாற்கடல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

லா. ச. ராமாமிருதம்


பரோபகாரி கூழுக்குப் பாடி, கோலம் போட்டால் வழியில் போகும் பெண்டிர் ஜோலி மறந்து அதிசயித்துப் பார்த்துக்கொண்டு நிற்பர். கூடை முடைவார். ஓலைக் கூரை பின்னுவார். துடைப்பக் குச்சியிலிருந்து இழை ஈர்க்கெடுப்பார். முதல் செடி நட, தென்னங்கன்று வாழைக்கன்று வைக்க அவரை அழைப்பார்கள். கிணற்றில் சொம்பு விழுந்துவிட்டதா ? ஐயாவை அழைச்சுண்டு வா; கொல்லையில் பாம்பா? குடத்தில் பிடித்துவிடுவார். பையன்கள் அவருக்குச் சஹா. கீழத்தெரு கோடியாத்தில், சிப்பாய்க்கலகம் பார்த்த சீதாப்பாட்டியிலிருந்து, எதிர் வீட்டுப் பண்டாரி சிவராமன் தனக்குப் பிறக்கத் தவங்கிடக்கும், இன்னும் வயிற்றில் பூச்சி வைக்காத சிசுவரை எல்லாருக்கும் ஐயா.

வேண்டாத விஷயஞானம் அதிகப்படி,

ஐயா ஐம்பது தாண்டியபின் லால்குடி கோயிலில் மெய்க்காவல் வேலை கிடைத்தது. (வாட்ச்மேன்) இந்தத் திடீர் அதிர்ஷ்டத்துக்குக் காரணம் தனித்துத் தெரியவில்லை. பலவாயிருக்கலாம். தமிழ்ப்பண்டிதர் குடும்பத்தின்மேல் இருந்த மதிப்பாயிருக்கலாம். ஒருநாள் விடாமல் ஐம்பது வருடங்களுக்கு மேல் அர்த்தஜாமம் பார்த்த குடும்பமாச்சே, தமிழ்ப்பண்டிதரிடம் படித்த பையன் தர்மகர்த்தாவாக ஆகியிருக்கலாம். ஐயா மேலேயே இரக்கமாயிருக்கலாம். அவரைக் கண்டு பயமாயுமிருக்கலாம். ”டேய் நீ இன்னிக்குக் கோயில் தர்மகர்த்தா. நாலுபேர் உன்னைப் பார்க்க வரா, போறா. ஆனால் உன் அப்பன் எப்படியிருந்தான், என்ன பண்ணினான். அவன் மூடு சூளை என்னன்னு எனக்குன்னா தெரியும்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/72&oldid=1533307" இலிருந்து மீள்விக்கப்பட்டது