பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

புகழேந்தி நளன் கதை



இடம் பெற்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து “மொழிமேல் செவி வைத்து மோகச் சுழிமேல் நெஞ்சோட வைத்து” என்று கூறுவது மேலும் அழகு தருகிறது.

வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேல் செவிவைத்து மோகச் - சுழிமேல்தான்
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர

‘வைத்து’ ‘வைத்து’ என்று திரும்பத்திரும்பக் கூறுவது சொற் பொருள் பின்வரு நிலை அணி என்பர். மஞ்சு - மேகம் - மேகம் ஒட அன்னம் வரக் கண்டான் என்று முடிக்கின்றார்.

11. அரிய உவமை

வறியவர் செல்வர் மனையில் நின்று கேட்டுப் பெறும் நிலையை அழகாகச் சித்திரிக்கிறார். அந்த நிலையில் நளன் இருந்தான் என்று கூறுவது நெஞ்சைத் தொடுகிறது.

முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்
அகம்பார்க்கும் அற்றோரைப் போல - மிகுங்காதல்
கேளா விருந்திட்டான். அன்னத்தைக் கேளாரை
வாளால் விருந்திட்ட மன்.

வறியவர் செல்வர்தம் முகம் பார்த்து, அவர்கள் மனநிலை அறிந்து, அருள் உள்ளம் அறிந்து இரக்கின்றனர். பிறகு அவர் உள்ளப் பாங்கு அதனையும் பார்த்தே அவர்களிடம் இரக்கின்றனர். அதைப் போன்று அவன் அவள் கூறும் காதற் செய்திக்காக அதனை எதிர் நோக்கித் தாழ்ந்து நின்றான். பகைவரை (கேளாரை) வாளால் விருந்து செய்தவன். அவள் சொற்களை இரந்து கேட்டான் என்கிறார். இரவலர்தம் உள்ளப் பாங்கைச் சித்திரித்து அதனை உவமையாகத் தருவது சிறப்பாக உள்ளது.