ராஜம்கிருஷ்ணன்
27
ஏற்க வேண்டியிருக்கும் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு வீட்டுப் பொறுப்புக்களில் இணக்கமாக உதவுவதற்கு முன் வர வேண்டும். ஆனால் அதேசமயத்தில், அலுவலகம் செல்லும் இளைய தலைமுறையினர், புதிய பொருளாதார சுதந்தரம் காரணமாக, ஊதியம் தேடிவரும் உரிமையில் உடுத்தவும், உண்ணவும், உல்லாச யாத்திரை செல்லவும் சுயநலம் பேணுவதும் நியாயம் என்றும், மூத்த தலைமுறை உறவினர், அவ்வழியில் உழைக்கவும் மக்களைப் பார்க்கவும் கடமைப்பட்டவர்கள் என்று கருதுவதும் மிகத் தவறு.
மூத்த தலைமுறையினரிடையே புதிய விழிப்பை உணர்த்தி மூடக் கருத்துக்களைப் போக்கவும், அன்பும் ஆதரவுமாக அவர்களின் ஒத்துழைப்பைப் பெறவும் இளைய தலைமுறைப் பெண்டிர் கடமையாகக் கருதி நடக்க வேண்டும். குடும்பங்களிடையே ஆணாதிக்கக் குவிப்பைக்கரைத்து, சமத்துவமான மனித சுதந்தரங்களைக் கொண்டு வர, ஆரவாரமற்ற புரட்சி மனமாற்றங்களாலேயே இயலும். குடும்பம் என்ற அமைப்பு மிகப் பழமையானது. அது ஒரு நாட்டை வலியுறுத்தும் சிறுசிறு தொகுதிகள். இத்தொகுதிகளின் இணையங்களே, நமது சமுதாயம். எனவே, ஒவ்வொரு பெண்ணும் அமைப்புக்களைப் பலப்படுத்துவதன் வாயிலாக, சமுதாய - நாட்டு ஒற்றுமையைக் குலைக்கும் பிளவுச்சக்திகளையே விரட்டியடிக்கும் நோக்கில், சமுதாய உணர்வையும் பொறுப்பையும் ஏற்கிறாள்.
அடுத்து, பொருளாதார அடிப்படையில் பற்றாக் குறையுடன் போராடும் வாழ்வில் எந்த ஒரு உரிமையும் சுகமும் காணாத நிலையில் பல கோடி பெண்கள் நலிகின்றனர்.