உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

61

ஆடம்பரமான பட்டுச்சரிகை மாளிகைக்கும் வைக்கலாம். காந்தி பெயரிலோ, இராஜாஜி பெயரிலோ, மதுக்கடையோ, புகையிலை, சிகரெட் சாமான்களோ தயாரித்தாலும் இந்நாட்களில் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. பிரபலமான பெயர்கள், வாணிபம், இலாபம், அவற்றால் ஏற்படும் பொருள் வளம், அரசியல், பதவிகள், அதிகார உரிமைகள் எல்லாமே படிப்படியாக இந்தக் குடியாட்சியில் மக்கள் புரிந்துகொண்டிருக்கும் செய்திகள். எந்த வழியிலும் பெறக்கூடியவை. காந்தி ஜெயந்தி, சுதந்திர நாள், குடியரசு நாள் எல்லாம் விடுப்பு நாட்கள். தொலைக்காட்சியில், புத்தம் புதிய என்ற அடைமொழியுடன் ஒரு வன்முறை, வெட்டு, குத்து, பெண் கூடிய படங்கள் ஒளிபரப்பாகும். தியேட்டர்களில் இளைஞர்களுக்காகவே திரையிடப்படும் படங்கள், கூட்டங்களை இழுக்கும் ஆளுயர விளம்பரங்கள், போக்குவரத்தைத் தடுமாறச் செய்யும். இந்த விடுப்புகளுக்கும் வழக்க நடைமுறைக்கும் தொடர்பே இல்லை. இன்றைய அடையாளங்களில் அந்தப் பழைய சத்தியத்தின் ஓர் இழைகூட இல்லை என்பது பெரும் சோகம்.

பிறப்பினாலேயே அறிவினால் ஞானம் பெறும் சாதியென்றும் ஆளும் சாதியென்றும் அடிமை ஊழியச் சாதியென்றும், போகத்துக்கும் மக்களைப் பெற்றுத் தருவதற்கும் பெண் பிறப்பென்றும், எட்டடிக்கு அப்பால் நின்றாலே தீட்டென்று ஓராயிரம் பிளவுகளையும் பல்வேறு சமயங்களையும், வழிபடு கடவுளரையும், மூடதருமங்களில் பெயர் பெற்ற ஆயிரமாயிரம் சிற்றரசுகளையும் கொண்டிருந்த இந்தத் துணைக்கண்டம், அடிகளின் வரவுக்குப் பின்னரே, காலனியாதிக்கத்தை எதிர்க்கத் திரண்டது.

அவர் திரட்டியது, உள்வலியை சுயநலம் கொன்ற தியாகங்களை; ஆத்மசக்தியை இங்கே ஆதிக்கம் செலுத்திய