முற்றுகை
19
செல்லவேண்டும். உணவுப் பொருள்கள் செல்லாமல் அடைத்துக் காத்திருந்தோமானால் மேலே இருந்து கொண்டு வீறு பேசுபவர்கள் வயிறு வாடும்போது நம் வழிக்கு வருவார்கள்; இல்லையானால் எல்லோரும் ஒருங்கே அழிவார்கள்!'என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆதலால் பறம்புமலையைக் காத்துக்கொண்டு படை முழுவதும் போர்விளையாமல் அங்கே கிடந்தன. பறம்பு மலை என்னும் கடவுளுக்குமுன் பாடு கிடப்பதுபோல இருந்தது, அந்தத் தோற்றம்.
★★★
ஒரு நாள் மேலிருந்து ஒரு செய்தி வந்தது; அம்பிலே கோத்து அனுப்பிய ஓலைச் சுருளொன்று படையினிடையே வந்து விழுந்தது. அதைக் கண்டவுடனே படைத்தலைவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று; 'சந்தேகமே இல்லை, இனிமேல் சமாதானம் செய்துகொள்ளத்தான் வேண்டும், இல்லாவிட்டால் உயிர் தப்புவது அரிது என்ற நல்லறிவு அவர்களுக்கு வந்திருக்கவேண்டும். புகலடைகிறோம் என்பதைத்தான் இந்த ஓலையில் எழுதி விடுத்திருக்கிறார்கள்' என்று உள்ளம் பொங்கிக் கூத்தாடினார்கள். ஓலைச் சுருளை எடுத்துக்கொண்டு மூவேந்தரும் அவையிருக்கும் இடத்துக்குச் சென்று முன்னே வைத்தார்கள்.
'மேலே இருந்து வந்தது' என்று சொல்லுவதற்கு முன்னே ஆத்திரத்தோடு பாண்டியன் அதை எடுத்துப்பிரித்தான்; வாசித்தான். இதென்ன! அவன் முகத்தில் ஒளி மழுங்குகிறதே! படித்துவிட்டுச் சோழன் கையிலே கொடுத்தான்; அவனும் படித்தான். படைத்தலைவர்கள் எதிர்பார்த்தது ஒன்றும் நிகழவில்லை; அவன்