பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 / புத்தரின் வரலாறு

கொண்ட அறுவகைச் சமயக் குருமாரும் புத்தர்மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள நினைத்தார்கள். அவர்கள் நேர்மையான வழியைவிட்டுக் கீழான இழிந்த முறையைக் கையாண்டார்கள். தங்கள் மதத்தைச் சார்ந்த சிஞ்சா மாணலிகை என்னும் பெயருள்ளஒரு அழகுள்ள மகளைத் தூண்டிவிட்டு, பகவன் புத்தர்மீது அவதூறு கூறும்படி ஏவினார்கள். அவளும் அதற்கு உடன்பட்டாள்.

சிஞ்சா மாணவிகை, நாள்தோறும் இரவு வேளையில் பகவன் புத்தர் தங்கியிருந்த இடத்திற்கு வருவதும் காலைவேளையில் அவ்விடத்திலிருந்து போவதுமாகப் பலரும் பார்க்கும்படி பல நாட்கள் செய்துவந்தாள். இவ்வாறு பலமுறை இவளைப் பார்த்தவர்கள் இவள்மீது ஐயங்கொண்டார்கள். ஊரார் இதைப்பற்றி அவதூறு பேசவும் தொடங்கினார்கள். பிறகு அவள், வயிற்றில் கருவாய்த்துக் கர்ப்பம் கொண்டவள்போல் நடித்தாள். கர்ப்பப் பெண்ணின் வயிறு போன்ற மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பொருளை வயிற்றில் கட்டிக்கொண்டு கர்ப்பங் கொண்டவள்போல தடித்தாள். இவ்வாறு நடித்து ஊராரிடத்தில் ஐயத்தையும் அபவாதப் பேச்சையும் உண்டாக்கினாள்.

ஒன்பது மாதம் சென்றபிறகு, ஒருநாள் மாலை பகவன் புத்தர் தரும போதனை செய்துகொண்டிருந்த இடத்திற்குப் போனாள். பெருங்கூட்டம் திரண்டிருந்த அந்தச் சபையிலே சென்று, பகவன் புத்தர்மீது கூடா ஒழுக்கக் குற்றம் சாற்றினாள். தான் கர்ப்பமானதுக்குக் காரணமாக இருந்தவர் புத்தர் என்றும், தனக்குப் பிள்ளைப்பேறு உண்டாகும் காலம் நெருங்கிவிட்டபடியால் அதற்கு வேண்டிய வழிவகைகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் எல்லோருக்கும் மத்தியில் சென்று கூறினாள். அப்போது பகவன் புத்தர் தமது உபதேசத்தை நிறுத்திக்கொண்டு, "தங்காய்! நீ கூறுவது மெய்யா பொய்யா என்பது எல்லோருக்கும் தெரியாது. ஆனால், அதன் உண்மை உனக்கும் எனக்கும் தெரியும்" என்று கூறினார். அப்போது, என்ன அதிசயம்! அவள் கர்ப்பவதிபோல வயிற்றில் கட்டியிருந்த மரத்துண்டு அவிழ்ந்து கீழேவிழுந்து அவள் கால்விரல்களைக் காயப்படுத்திற்று! சக்கரன் (இந்திரன்) தனது ஏவலாளர்களை ஏவ அவர்கள் சுண்டெலிகள் போல் சென்று அவள் வயிற்றில் கட்டியிருந்த மரத்துண்டு அறுந்து விழும்படிச் செய்தார்கள்! அப்போது அங்கிருந்த ஜனங்கள் எல்லோரும் உண்மையறிந்து அவளை வைது அடித்துத் துரத்தினார்கள். அவமானம் அடைந்து அவ்விடத்தினின்று அவள் ஓடினாள். பிறகு, பூமி வெடித்து அதில் விழுந்து நரகத்தையடைந்தாள்.