பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 41

உத்ரக ஆசிரமம்

ஆளார முனிவரின் ஆசிரமத்தைவிட்டுச் சென்ற கெளதமர், மகத தேசத்தை யடைந்து மஹீநதி என்னும் ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்றார். சென்று அங்கிருந்த உத்ரக இராமபுத்திரர் என்னும் முனிவருடைய ஆசிரமத்தை யடைந்தார். அடைந்து அவருடைய போதனைகளை அறிந்துகொள்ள விரும்பினார். உத்ரகர் இவரைச் சீடராக ஏற்றுக்கொண்டு தாம் அறிந்திருந்த எல்லாவற்றையும் இவருக்கு உபதேசம் செய்தார். இவருடைய உபதேசம், ஆளார முனிவருடைய உபதேசத்தைப்போன்றதே. ஆயினும் அதைவிட அதிகமாக எட்டாவது ஸமாபத்தியை (தியானத்தை)யும் கொண்டது.

கௌதம முனிவர் உத்ரகர் போதித்தவற்றைக் கேட்டு அவற்றின்படி யோகாப்பியாசம் செய்து எட்டாவது ஸமாபத்தியையும் கைவரப்பெற்றார். பிறகு, உத்ரக முனிவரிடம் சென்று தாம் எட்டாவது ஸமாபத்தியைக் கைவரப்பெற்றதைக் கூறி இதற்கு மேலாக ஏதேனும் உண்டா என்று கேட்டார். உத்ரக முனிவர், 'இவ்வளவுதான்; இதற்குமேல் ஒன்றும் கிடையாது" என்று கூறி, ஆளார காலாமர் செய்ததுபோலவே உத்ரகரும் கௌதமரைத் தமக்குச் சமமாக வைத்துத் தமது சீடர்களில் சரிபாதி தொகையினரை இவருக்கு மாணவராகக் கொடுத்துத் தமக்குச்சமமான ஆசாரிய பதவியளித்துப் பாராட்டினார். ஆனால், எட்டாது ஸமாபத்தியும் மோக்ஷத்திற்கு வழியல்ல என்று அறிந்த கௌதம முனிவர், ஆசாரிய பதவியை ஏற்றுக்கொள்ளாமல் ஆசிரமத்தைவிட்டுப் போய்விட்டார்.

கௌதமரின் மன உறுதி

கபிலவத்து நகரத்தை விட்டுப்புறப்பட்ட அமைச்சர்கள் இருவரும், சித்தார்த்த குமாரன் சென்ற வழியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரைத் தேடிப் பின்தொடர்ந்து சென்றார்கள். கடைசியாக பார்க்கவ முனிவர் ஆசிரமத்துக்கு வந்தார்கள். முனிவர் அவர்களை வரவேற்று அவர்கள் வந்த காரியத்தைக் கேட்டார். சித்தார்த்த குமாரன் ஆசிரமத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரை அழைத்துப்போக வந்ததாக அமைச்சர்கள் கூறினார்கள். பார்க்கவ முனிவர் இவ்வாறு கூறினார்: "நீங்கள் கேள்விப்பட்டது உண்மையே. சித்தார்த்த குமாரன் இங்கு வந்து சிலநாள் தங்கியிருந்தார். பிறகு எமது கொள்கை அவருக்குப் பிடிக்காமல் இவ்விடத்தைவிட்டுப் போய்விட்டார். அவர், ஆளாரகாலாமரது ஆசிரமத்துக்குப் போனதாகத் தெரிகிறது" என்று கூறினார்.