பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 43

"நீங்கள் கூறிய, துறவு பூண்டு பிறகு மீண்டும் அரசாட்சி செலுத்திய அரசர்கள், உறுதியற்றவர்கள்.அவர்களை உதாரணமாக நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்."

"போதிஞானத்தை அடைந்தாலன்றி நான் திரும்பி வரமாட்டேன். போதிஞானம் பெறாவிட்டால் நெருப்புப் பிழம்பில் புகுவேனேயன்றித் திரும்பிவந்து அரசாள மாட்டேன். இது உறுதி" என்று கூறினார்.

இதைக் கேட்ட அமைச்சர்கள் பெரிதும் வருந்தினார்கள். இவருடைய உறுதியைக் கண்டு அவர்கள் கபிலவத்து நகரத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்.

பிறகு, போதிசத்துவர், முன்பு கூறியபடி ஆளார காலமாருடைய யோகமுறை சாந்தி நிலையைத் தராது என்று அறிந்து அவ்வாசிரமத்தை விட்டு வெளியேறினார்.

உருவேல கிராமம் சென்றது

உத்ரக ஆசிரமத்தை விட்டு நீங்கிய கௌதம முனிவர், உருவேல என்னும் கிராமத்தை யடைந்தார். அந்தக் கிராமத்தின் அருகிலே தங்கித் தபசு செய்யக்கருதி அதற்குத் தகுந்த இடம் ஒன்றைத் தேடினார். தேடினபோது இயற்கைக்காட்சி மிகுந்தஒரு வனத்தைக் கண்டார். இவ்வனத்தின் வழியே நேரஞ்சர நதி என்னும் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. இது கங்கையாற்றின் தென்புறத்தில் ஓடிய கங்கையின் ஒரு உபநதி. அழகான காட்சியுடைய நேரஞ்சர நதி குளிர்ந்து தெளிந்த நீருள்ளது. இதன் கரையில் மரம் செடி கொடிகள் நிறைந்த சோலையொன்று இருந்தது.

இந்த இடம் யோகிகள் தங்கி, தபசு செய்வதற்குத் தகுந்த இடம் என்று கௌதம முனிவர் அறிந்தார். இந்த வனத்துக்குச் சற்றுத் தூரத்திலே ஒருகிராமம் இருந்தது. கௌதம முனிவர் இந்த வனத்தில் தங்கித் தபசு செய்து கொண்டிருந்தார். இவர் தனியே தவம்செய்து கொண்டிருந்தபோது ஐந்து துறவிகள் இவரிடம் வந்தார்கள். அத்துறவிகளின் பெயர்கள் கொண்டஞ்ஞர், வப்பர், பத்தியர். மஹாநாமர், அஸ்ஸஜி என்பன. இவர்களில் கொண்டஞ்ஞர் என்பவர், சித்தார்த்த குமாரனின் ஜாதகத்தைக் கணித்த நிமித்திகரில் ஒருவர். மற்ற நால்வரும் ஜாதகம் கணித்த மற்ற நிமித்திகரின் புத்திரர்கள். இந்த ஐந்து துறவிகளும் கௌதம முனிவரிடம் சீடராக விரும்பி வந்தவர்கள். பல இடங்களில் சுற்றித்திரிந்த இந்தத்துறவிகள்