பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதம புத்தர்

சித்தார்த்த குமாரன் திருவவதாரமும்

இல்லற வாழ்க்கையும்

சித்தார்த்த குமாரன் பிறப்பு

நாவலந்தீவு எனப்படும் பரதகண்டத்திலே, மத்திய தேசத்திலே சாக்கிய ஜனபதத்திலே கபிலவத்து என்னும் அழகான நகரம் ஒன்று இருந்தது. ஒரு காலத்தில் அந்த நகரத்தை ஜயசேனன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அவ்வரசனுக்குச் சிம்மஹணு என்னும் மகன் பிறந்தான். சிம்மஹணுவுக்குச் சுத்தோதனர், சுல்லோதனர், தோதோதனர் அமிதோதனர், மிதோதனர் என்னும் ஐந்து ஆண் மக்களும், அமித்தை, பிரமிதை என்னும் இரண்டு பெண் மகளிரும் பிறந்தனர். இவர்களுள் மூத்த மகனான சுத்தோதனர், தமது தந்தை காலமான பிறகு அந்நாட்டின் அரசானானர். சுத்தோதன அரசரின் மூத்த மனைவியாரான மஹாமாயா தேவிக்கு ஒரு ஆண்மகவும் இளைய மனைவியாரான பிரஜாபதி கௌதமிக்கு ஒரு ஆண் மகவும், ஒரு பெண் மகவும் ஆக மூன்று மக்கள் பிறந்தனர். மாயா தேவிக்குப் பிறந்த மகனுக்குச் சித்தார்த்தன் என்று பெயர் சூட்டினார்கள். பிரஜா கௌதமைக்குப் பிறந்த மகனுக்கு நந்தன் என்றும், மகளுக்கு நந்தை என்றும் பெயர்சூட்டினார்கள். இவர்களுள் சித்தார்த்த குமாரன் போதி ஞானம் அடைந்து புத்த பகவனாக விளங்கினார். இவருடைய வரலாற்றினை விரிவாகக் கூறுவோம்.