பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 / புத்தரின் வரலாறு

கொண்டு உலகத்தைப் பார்த்தபோது அறிவு நிரம்பிய மனிதரும், சற்று அறிவு மழுங்கிய மக்களும், மற்றும் அறிவு குன்றிய மக்களும், அறிவே இல்லாத மக்களும் இருப்பதைக் கண்டார். அவர்கள் அறிவுக்கண் பெற்றால் ஞானத்தையறியும் ஆற்றல் பெறுவார்கள் என்பதையும் அறிந்தார்.

இவ்வாறு கண்ட பகவன் புத்தர், சகம்பதி பிரமனைப் பார்த்து இவ்வாறு கூறினார்; "அறநெறியை அறிந்து கொள்ளுகிறவர்களுக்கு அழியாத் தன்மையுள்ள நிர்வாண மோக்ஷத்தின் கதவு நன்றாகத் திறக்கப்பட்டிருக்கிறது. காதுடையவர்கள் கேட்கட்டும். இனியதும் நல்லதும் ஆகிய அறநெறியை, நான் போதிக்காமல் இருக்க எண்ணிய தர்மத்தை, உலகத்திலே போதிக்கப்போகிறேன்."

பகவன் புத்தர் உலகத்திலே தர்மோபதேசம் செய்ய உடன்பட்டருளியதையறிந்த சகம்பதி பிரமன் மிகவும் மனம் மகிழ்ந்து, பகவரை வணங்கி வலம்வந்து தமது பிரமலோகத்துக்கு போய்விட்டார்.

கேட்பவர் யார்?

அதன் பின்னர், பகவன் புத்தர், "முதன் முதலாக யாருக்கு உபதேசம் செய்யலாம். உபதேசத்தைத் தெரிந்து கொள்ளக்கூடியவர் யார்?" என்று தமக்குள் யோசித்தார். அப்போது ஆலாரகாலாமர் என்னும் முனிவர் உபதேசத்தை அறிந்துகொள்ளக்கூடியவர் என்று கண்டு, அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று ஞானக்கண்ணால் பார்த்தபோது, அவர் இறந்து இப்போது ஒருவாரம் ஆகிறது என்பதை அறிந்தார். பின்னர், வேறு யாருக்கு உபதேசம் செய்யலாம் என்று சிந்தித்தபோது, உத்ரகர் என்னும் முனிவர் தர்மோபதேசத்தைத் தெரிந்துகொள்ளக்கூடியவர் என்பதைக் கண்டு, அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று பார்த்தபோது, நேற்று இரவுதான் அவர் காலமான செய்தியைக் ஞானக் கண்ணினால் அறிந்தார்.

பின்னர், வேறு யாருக்கு உபதேசம் செய்யலாம் என்று சிந்தித்தபோது. முன்பு தம்முடன் தமது சீடராக இருந்த கொண்டஞ்ஞர் முதலிய ஐந்து தாபசகர்கள் போதிக்கத் தக்கவர்கள் என்று கண்டு, அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று பார்த்தபோது, வாரணாசி(காசி) நகரத்திலே இஸிபதனம் என்னும் இடத்தில் இருக்கிற செய்தியை அறிந்து அவ்விடம் போக எண்ணினார்.