பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 / புத்தரின் வரலாறு

பகவன் புத்தர் வடக்கு நோக்கிக் கயா தேசத்தைக் கடந்து உரோகிதவத்து, உருவில்லாகல்பம், அனாலயம், சாரதிபுரம் முதலான இடங்களையும் கங்கா நதியையும் கடந்து வாரணாசி நகரத்திற்குப் போனார். அன்று ஆஷாட பெளர்ணமி நாள்.

இஸிபதனம் சேர்தல்

மாலை வேளை. பகவன் புத்தர் வாரணாசி நகரத்தின் அருகில் இருந்த இஸிபதனம் என்னும் தோட்டத்திற்குச் சென்றார். அங்கு இருந்த ஐந்து துறவிகள் - இவர்கள் உருவேல ஆசிரமத்தில் போதிசத்துவரின் சீடராகி இருந்து பிறகு அவரை விட்டுப் போனவர்கள் - தூரத்தில் வருகிற பகவன் புத்தரைப் பார்த்தார்கள். பார்த்துத் தங்களுக்குள் இவ்வாறு பேசிக்கொண்டார்கள். "அதோ கௌதமர் வருகிறார். கடுமையான தபசை நீக்கிச் சுகவாழ்க்கையை மேற்கொண்ட கௌதம முனிவர் வருகிறார். அவர் வந்தால் நாம் அவரை வணங்கக்கூடாது. எழுந்து நின்று மரியாதை செய்தல் கூடாது. ஆனால், ஒரு ஆசனத்தை மட்டும் விட்டு வைப்போம். அவருக்கு விருப்பம் இருந்தால் இதில் உட்காரட்டும்."

பகவன் புத்தர் அருகில் வந்தபோது, அந்த ஐந்து துறவிகளும் தமக்குள் பேசிக்கொண்டபடி இருக்கவில்லை. அவர்கள் எழுத்து சென்று பகவரை எதிர்கொண்டழைத்தார்கள். ஒருவர், அவர் கையிலிருந்த பாத்திரத்தையும் துணியையும் வாங்கினார். ஒருவர் இருக்க ஆசனம் கொடுத்தார். இன்னொருவர் கை கால் கழுவ நீரும் துடைக்கத் துணியும் கொண்டு வந்தார். பகவன் புத்தர் அமர்ந்து கால் கழுவிக்கொண்டார்.

பிறகு அவர்கள் பகைவரைப் பெயரிட்டழைத்தும் நண்பரே என்று விளித்தும் பேசினார்கள். இவ்வாறு அவர்கள் நண்பர் என்றும் கௌதமர் என்றும் அழைத்ததைக் கேட்ட பகவர், "பிக்குகளே, ததாகதரை நண்பர் என்றும் கௌதமர் என்றும் அழைக்காதீர்கள். ததாகதர் பெளத்திரமான சம்புத்தராவார். பிக்குகளே! செவி கொடுத்துக் கேளுங்கள். பிறவாத நிலை கைவரப் பெற்றேன். உங்களுக்குத் தர்மத்தை உபதேசிப்பேன். உயர்குடியிற் பிறந்தவர்கள் எதை அடைவதற்காக இல்லறத்தைவிட்டுத் துறவுபூண்டு தபசு செய்கிறார்களோ அந்தப் பரிசுத்தமான உயர்ந்த வாழ்க்கையை நீங்கள் அடைவீர்கள். அந்த வழியை உங்களுக்குப் போதிக்கிறேன். வாருங்கள்" என்று கூறினார்.