பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

புறநானூற்றுச் சிறு கதைகள்

"உயிர் போய்விடும் என்றுதானே சொல்லப் போகிறாய்? பரவாயில்லை! பிறரிடம் தோற்று அடிமையாகி மானம் இழந்து வாழும் இந்த வாழ்வும் ஒரு வாழ்வாஎன்றெண்ணிமானத்திற்காக உயிர் நீத்தான் கணைக்கால் இரும்பொறை என்று எதிர்காலம் அறியட்டும்” இரும்பொறை கண்டிப்பாகக் காவலன் கொண்டு வந்து கொடுத்த தண்ணிரைப் பருகுவதற்கு மறுத்துவிட்டான். இனி வற்புறுத்துவதில் பலனில்லை என்று காவலன் வெளியே சென்றான். சிறைக்கதவு மூடப்பட்டது. கதவு மூடப்பட்ட ஒலியோடு உள்ளிருந்து ஈனஸ்வரத்தில் விக்கல் ஒலியும் கேட்டது.

அரை நாழிகைக்குப் பிறகு சிறைக்குள்ளிருந்து விக்கல் ஒலி வருவதும் நின்றுவிட்டது. உள்ளே விளக்கேற்றுவதற்கு வந்த காவலன் ஒருவன் இருளில் கணைக்கால் இரும்பொறையின் சடலத்தை எற்றித் தடுக்கி விழுந்தான்.

 குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
 ஆள் அன்று என்று வாளில் தப்பார்
 தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
 கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
 மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
 தாம் இரந்து உண்ணும் அளவை
 ஈன்மரோ இவ் உலகத்தானே? (புறநானூறு 74)

குழவி = குழந்தை, ஊன்தடி = தசைப் பிண்டம், ஞமலி = நாய், கேளல் கேளிர்=பகைவரின் சுற்றத்தார், வேளாண்=உதவி, சிறுபதம் = சிறிதளவு நீர், மதுகை = மனவலிமை, இரந்து = யாசித்து.


3. ஊசி முனை

அப்போது நகரத்திலே திருவிழாச் சமயம் விழாவின் கோலாகலமும் ஆரவாரமும் நகரெங்கும் நிறைந்து காணப் பட்டன. ஊரே அந்தத் திருவிழாவில் இரண்டறக் கலந்து