நா.பார்த்தசாரதி 405
அவள் புதிரானாள். சமூகசேவை முகாம் முடிந்து அவன் மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிய நாளன்று அங்கே குமரப்பன் அவனுக்குச் சொல்வதற்காக ஒரு பெரிய துயரச் செய்தியை வைத்திருந்தான்.
நமக்கு மிகவும் வேண்டியவர்களுக்குத் துயரம் வந்துவிட்டால் அப்படி ஒரு துயரம் நிகழ்ந்ததாகவே நம் மனம் நம்பி ஒப்புக்கொள்ள மறுக்கிறது. சந்தனச் சோலை கிராமத்தில் சமூகசேவை முகாம் முடிந்து மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிய சத்தியமூர்த்தியிடம் குமரப்பன் தெரிவித்த துயரச் செய்தியும் நம்பவும், ஒப்புக்கொள்ளவும் இயலாத அளவுக்கு வேதனை நிறைந்ததாகத்தான் இருந்தது. ஏற்கெனவே சமூகசேவை முகாம் முடிந்து திரும்பியதும் மதுரைக்குப் புறப்படுவதாக இருந்த அவன் இந்தச் செய்தி தெரிந்ததும் உடனே புறப்பட்டாக வேண்டியிருந்தது. உடம்பும் மனமும் தளர்ந்து போய்க் கேள்விப்பட்ட துயர நிகழ்ச்சியால் தாங்க முடியாத வருத்தத் தோடிருந்தான் அவன். 'இரண்டு மூன்று நாட்களுக்கு முன் நவராத்திரி விழாவுக்காக மஞ்சள்பட்டி சமஸ்தானத்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது மோகினியும் அவள் தாயும் வந்து கொண்டிருந்த கார் பயங்கரமான விபத்துக்குள்ளாகி விட்டதென்றும் விபத்து நடந்த இடத்திலேயே மோகினியின் தாய் முத்தழகம்மாளும், கார் டிரைவரும் இறந்துபோய் விட்டனர் என்றும், விபத்தில் உயிர் தப்பிய மோகினி சில்லரைக் காயங்களோடு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்றும் தினப்பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பதாகக் கூறிவிட்டுக் குமரப்பன், அந்தப் பத்திரிகைகளையும் கொண்டு வந்து காண்பித்தான். 'கார் விபத்தில் பிரபல நாட்டியக்காரி மயிரிழையில் உயிர் தப்பினார் என்று தலைப்பிட்டு முதற் பக்கத்தில் பரபரப்பான செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது அது. அந்தச் செய்தியைப் படித்ததும் சத்தியமூர்த்தியின் உடம்பும் மனமும் நடுங்கின. கண் கலங்கிற்று. பிறருடைய துயரங்களுக்காக மனம் வருந்தி அநுதாபப்பட நேரும் சம்பவங்கள் அவன் வாழ்க்கையில் நிறைய நிகழ்ந்திருக்கின்றன. இன்று மோகினிக்கு நேர்ந்த துன்பத்தைக் கேள்விப்பட்டபோதோ சாதாரணமான வருத்தத்திற்கும் துயரத்திற்கும் அப்பாற்பட்டதொரு தவிப்பையே அவன் உணர்ந்தான். சொற்களால் சொல்ல முடியாததோர் அழகிய சோகம் மிதக்கும் மோகினியின் கண்களை நினைவு கூர்ந்தான். அந்தக் கண்களில் நீர் பொங்க அவள் அழுவது