பக்கம்:மயில்விழி மான்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தப்பிலி கப்

121

"நீ கூடவா அப்படி? அவ்வளவு நஷ்டம் ஆகி விட்டதா?"

"உனக்கு ஞாபகமிருக்குமே? பாகவதர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து நான் சண்டை போட்டுக் கொண்டு விலகிய போது என்னிடம் 20,000 ரூபாய் பணம் இருந்தது. எல்லாம் போய்விட்டது. நாளைக்குக் காப்பி சாப்பிடப் பணம் கிடையாது."

"உனக்கென்ன அப்பா! என்ன போனால் தான் என்ன? பெண்டாட்டி பிள்ளையா, தாய் தகப்பனாரா, ஒருவரும் இல்லை. உன் ஒருவனுக்கு எப்படியும் சம்பாதித்துக் கொள்வாய். நீ கொடுத்து வைத்தவன்."

"ரொம்பக் கொடுத்த வைத்தவன் நான். இருக்கட்டும், உன் சங்கதி என்ன? தாயார் முகத்தில் விழிக்க முடியாதென்று சொன்னாயே; ஏன்?"

"ஆமாம், வீட்டு வாடகை இரண்டுமாதம் பாக்கி. நாளைக்கு அரிசி இல்லை. 250 ரூபாய் கடன் இருக்கிறது; கடன்காரன் 'பிராது செய்வேன்' என்கிறான்."

"ஊரிலே நிலம் இருந்ததே?"

"அதெல்லாம் முன்னமே கடன்காரன் கொண்டு போய்விட்டான்."

"அடப்பாவி! அப்படியானால் என்ன செய்யப் போகிறாய்?"