பக்கம்:மயில்விழி மான்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மயில்விழி மான்

இல்லாத தீவுகள், அநாகரிகக் காட்டுமிராண்டி ஜாதியார் வசிக்கும் தீவுகள், பாதி நாகரிகமடைந்த மக்கள் வாழும் தீவுகள் - இப்படி எவ்வளவோ இருக்கின்றன. அத்தகைய தீவுகளில் ஒன்றில் தற்செயலாக இறங்கினால், உயிர் தப்பிப் பிழைக்க ஏது உண்டு.

ஆனால் இந்த அற்ப நம்பிக்கையானது அநேகருக்கு விமானத்திலிருந்து வெளியில் குதிப்பதற்குரிய தைரியத்தை அளிக்கவில்லை.

சாதாரணமாக நான் அவ்வளவு தைரியசாலி என்று பெயர் பெற்றவன் அல்லவென்றாலும் அந்தச் சமயத்தில் எங்கிருந்தோ எனக்குத் தைரியம் பிறந்தது.

பாராசூட்டை எடுத்துக் கவனமாக மாட்டிக் கொண்டேன். கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டேன். விமானத்திலிருந்து வானவெளியில் குதித்தேன்.

'உயிர் போவது' என்று சொல்கிறார்களே, அது என்ன என்பது எனக்கு அப்போது தெரிந்தது. என் மண்டை வெடிப்பது போலவும், உடம்புக்குள்ளிருந்து உயிர் வெளிப்பட்டு மேலே போய்விட்டது போலவும், உடம்பு மட்டும் கீழே விழுவது போலவும் தோன்றியது. 'ஆகா! இந்தப் பாராசூட் ஏமாற்றிவிட்டது! துரோகம் செய்து விட்டது!" என்று எண்ணினேன். நல்ல வேளையாக, உடனே நினைவு இழந்துவிட்டேன். அப்புறம் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.