பக்கம்:மயில்விழி மான்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மயில்விழி மான்

நாடகம் யாரும் எதிர்பாராத அளவில் அமோகமான வெற்றியுடன் முடிந்தது.

மறு நாள் நமச்சிவாயம் என்னிடம் வந்து, "மாமா! என் மானத்தை காப்பாற்றினீர்கள்!" என்று காலைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான். பற்பலவிதமாகத் தனது நாடகத் திறமையையெல்லாம் காட்டி எனக்கும் நீலமணிக்கும் நன்றி செலுத்திவிட்டுக் கொழும்புக்குப் பிரயாணமானான். வழக்கமாக ஸ்திரீ வேஷம் போடுகிற பையனுக்கு சுரம் இறங்க ஆரம்பித்து விட்டது என்று தெரிந்த நானும் மனநிம்மதி அடைந்தேன். யாழ்ப்பாணத்தில் என்னுடைய கச்சேரிகள் முடிந்ததும் ஊருக்குத் திரும்பினேன்.


4

நீலமணியின் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன் அல்லவா? அந்தக் கவலை என் மனத்திலிருந்து தீர்ந்து போய் விட்டது. நீலமணி விரைவில் என் பொறுப்பிலிருந்து போய் விடுவாள் என்று நிச்சயம் செய்து கொண்டேன். அந்தப்படியே நடைபெறவும் செய்தது. ஆனால் அன்று எழுதிய எழுத்தை அழித்து எழுத வல்லவர் யார்? சில காலம் வரைக்குந்தான் நான் நீலமணியை மறந்து அவளைப் பற்றிய கவலை அதிகம் இல்லாமல் இருக்க முடிந்தது.

சீக்கிரத்திலேயே நமச்சிவாயம் ஐயம்பேட்டையில் என்னுடைய வீடு தேடி வந்து சேர்ந்தான்.